You are hereஃபிப்ரவரி 15 2012 / காதலுடல்
காதலுடல்
நிகழ்காலத்தில் சிவா
மனதைப் பற்றி மனம் போன போக்கில் சிந்திப்பவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறார். ஒரு சிறிய தொழிற்சாலை ஒன்றைச் சொந்தமாய் நடத்தி வருகிறார். தியானம், ஆன்மீகம் போன்றவற்றில் பெருநாட்டம் கொண்டவர். இவரது ஆன்மீகப் பயணங்கள் நம்மை பொறாமை கொள்ளத்தக்கவை.
உள்ளும் புறமும் தூய்மை என்றால் உள்ளே மனமும் வெளியே உடலும் தூய்மை பெறவேண்டும் என்றே நாம் எண்ணுகிறோம். ஆனால், உடலையே உள்புறம் தூய்மை செய்ய வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படியானால் இதை எப்படிச் செய்ய வேண்டும்? என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா?
முதலில் காலையில் எழுந்தவுடன், பெட்காபி என்பதை மறந்துவிடவேண்டும். காலைக் கடன்களை முடித்தவுடன், சுத்தமான தண்ணீரை சிரமம் இன்றி இயன்ற அளவு மட்டும் குடிக்கவும். இதனால், காலை ஒன்பது மணி அளவில் சிறுநீர் தனிப்பட்ட நாற்றத்துடன் பிரிவதை உணரமுடியும். அதன் பின் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்.
நாள் ஆக ஆக நீரை உணவாக எடுக்கும் பழக்கத்தை மதியம் வரை, மாலை வரை என உங்கள் வசதிப்படி நீட்டிக்கொள்ளுங்கள். உங்களை பட்டினி இருக்கச் சொல்லவில்லை. இடையில் பசி எடுக்கும்போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம். உணவு அருந்துவதை தள்ளிப்போட்டு பின்னர் அவசியமெனில் சாதாரண உணவை குறைவாக உட்கொள்ளலாம். மாலையில் முடிந்தளவு வேகவைத்த காய்கறிகளும், ஒரே ஒரு சப்பாத்தியும் சாப்பிடலாம். வேகவைத்த காய்கறிகளை உண்பதன் மூலம் உணவுப்பாதையில் உள்ள கெட்ட விசயங்களை பெருங்குடலுக்கு எளிதில் நகர்த்திக்கொண்டு வந்து விடுகிறோம்.
உப்பு மிகவும் குறைவாக சேர்த்துக் கொள்ளவும். உப்பை எந்த அளவு குறைக்கிறீர்களோ அந்த அளவு உடல் துர்நாற்றம் நீங்கும். கண் பார்வை தெளிவடையும். வியர்வை அதிகம் ஏற்படாது. இதை அனுபவத்தில் நீங்கள் உணரலாம்.
உங்களை ஒரு நாள் கூட முழுப்பட்டினி இருக்கச் சொல்லவில்லை.
அன்றாடம் உண்ணும் உணவில் ஒரு பகுதி வாயிலும், உணவுப்பாதையிலும் படிந்து விசமாகிறது. உணவுப்பாதையில், அன்றன்றைக்குப் படியும் விசத்தை (உடலுக்குத் தேவையில்லாத இராசயனங்கள், மிச்சம் மீதி) ஒவ்வொரு நாளும் வெளியேற்றி விடும்படி சொல்கிறேன்.
இருவேளை (மதியம், மாலை) உணவுக்கு இடையே ஐந்து மணி நேரமாவது இடைவெளி கொடுத்தல் நலம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையேனும் ஒரு நாளாவது உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்தவுடன் ஒரே ஒரு அச்சு வெல்லத்தை மென்று விழுங்கியபின் தண்ணீர் குடிக்கலாம். இது இரவில் இருந்து தொண்டைக்கு கீழ் படியும் கெட்ட விசயங்களை வயிறு வரை இறக்க உதவும். பட்டினியாக இருக்கும்போது உணவுப்பாதையில் படியும் விசத்தை இறக்க சில பேரீச்சம் பழங்களை உண்டு தண்ணீர் குடிக்கலாம். அதோடு நாம் குறைந்த உணவே எடுப்பதால் மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு கீரைகளை வேகவைத்து கொஞ்சம் அவல் சேர்த்து உண்டு சரி செய்யலாம்.
உடனடி பலனாக உடல் இளைத்துக்கொண்டே வரும். எதுவரை? தேவையில்லாதவை நீங்கும் வரை. மேலும், இந்த முறையில் இரத்தம் நமது உணவு பழக்க வழக்கங்களினால் நீர்த்து இருக்கும் தன்மை மாறி அது அடையக்கூடிய மிக அடர்த்தியைப் பெறுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியானது இயல்பு நிலைக்கு திரும்புகிறது. அசைவம் சாப்பிடும் பழக்கம் இருப்பின் ஓரிரு மாதங்கள் அசைவத்தை நிறுத்திவிட்டு, பின்னர் பயிற்சி செய்வது தான் நல்ல பலனைக் கொடுக்கும்.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வளரும் இளம்பருவத்தினருக்கு இம்முயற்சி ஏற்றதல்ல. மற்றவர்கள் இதை முயற்சித்துப்பாருங்கள். இதுவரை நாம் படித்த, சேமித்த விசயங்களோடு பொருத்திப் பார்த்து விவாதம் செய்வதை விட செயல்படுத்தி பலனை அனுபவித்துப்பார்ப்பதே சிறந்தது. ஒருவேளை தொடர்ந்து மருத்துவச் சேவையினை மேற்கொண்டு இருக்கும் அன்பர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப இதைச் செயல்படுத்திப் பார்க்கலாம்.
என் நண்பர் இதை மேற்கொண்டதில் 79 கிலோவிலிருந்து 10 நாளில் 74 கிலோவிற்க்கு வந்து விட்டார். நானும், நடைமுறைப்படுத்திப் பார்த்த பின்பே பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு என்ன ஆச்சு என்கிறீர்களா? 58.5 லிருந்து 57.8. அவ்வளவுதான்
உடலைக் காதலியுங்கள். அப்போது தான் மற்ற காதல்களையும் தொடர முடியும்.


Post new comment