ஐயுறவு

அது ஒரு நீண்ட காத்திருப்பு. குறைந்தது எட்டாண்டு. மகளுக்கு மண நிச்சயதார்த்தம்.

ரம்யா சுற்றிச் சுழன்று கொண்டிருந்தாள். மாப்பிள்ளைக்கு அரசாங்க‌ வங்கியில் பணி. பெற்றோருக்கு ஒரே மகன். மகளைத் திருமணம் செய்து கொடுப்பதென்பது அத்தோடு முடியும் கடமை அல்ல. அவள் அங்கு அதன் பிறகும் நிம்மதியாக இருப்பாளா என்பதை உறுதி செய்யவும் வேண்டி இருக்கிறது. அப்படி விசாரித்து, அலைந்து திரிந்து அமைந்த வரன். மாலையும் கழுத்துமாக‌ இருவரையும் கண்டதும் ரம்யாவுக்குக் கண்கள் நிறைந்து தளும்பின. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். வந்திருந்தோரில் பலரும் வியப்பாகக் கேட்டது ஒரே கேள்விதான்: “இருபத்திமூணுதானே ஆகுது, அதுக்குள்ள என்ன அவசரம்!”

“நல்ல இடமா அமைஞ்சுது. அதான்.”

தயக்கமும் தடுமாற்றமுமாக‌த்தான் ஒவ்வொரு முறையும் அப்பதிலைச் சொன்னாள். நல்ல இடமாக அமைந்தது உண்மைதான். ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. நிஷா பூப்பெய்தியதிலிருந்து அவளது திருமணத்திற்காக காத்திருக்கிறாள் ரம்யா!

விழா முடிந்ததும் மகளின் முகம் வழித்து தன் இரு கரங்களால் திருஷ்டி முறித்தாள்.

 “ராசாத்தி…”

அருகிலிருந்த மாப்பிள்ளை, “என்ன அத்தை, உங்க புள்ளைக்கு மட்டும்தானா? எனக்கும் கண் பட்டிருக்கும்தானே?” என்று தன் முகத்தை ரம்யாவை நோக்கி முன்நகர்த்தினான்.

கொஞ்சம் கூச்சத்தோடு மாப்பிள்ளைக்கும் திருஷ்டி கழித்தாள் ரம்யா. நாற்பத்தி ஐந்து வயது அவளுக்கு. பார்த்தால் முப்பதுகளில் சொல்லலாம். உறுதியான இறுகிய தசைகள் அவள் மனதை போலவே. அவள் அதற்கென எந்த மெனக்கெடலும் செய்யவில்லைதான். அவளது மரபணுவோ, பழக்க வழக்கங்களோ அப்படி ஓர் அம்சம் உடலில் படிந்திருந்தது.

“அப்பா எங்கம்மா? இப்போதான் பார்த்தேன். அதுக்குள்ள காணும்?” நிஷா கேட்டாள்.

“இங்கதான் யார்ட்டயோ பேசிட்டு இருந்தார். என்னம்மா, என்ன வேணும்?”

“இல்ல, காணுமேன்னு கேட்டேன்.”

“அய்யய்யோ! நிஷா டாட்ஸ் லிட்டில் பிரின்சஸா? தெரியாம மாட்டிக்கிட்டேனா!” 

அஜய் கேலி செய்ய, நிஷா சிரித்தாள். ரம்யாவிற்கு சுருக்கென்றிருந்தது. அவளும் பார்வையை அலைபாய விட்டாள். சிறிய மண்டபம்தான். சற்று முன்னே வந்து பார்த்ததுமே மண்டப வாசலில் ஓரமாக நாகராஜன் நின்றிருப்பது தெரிந்தது. 

“இங்க என்ன பண்றீங்க? நிஷா உங்களக் கூப்டா.”

“வரேன்னு சொல்லு.”

“என்னாச்சு?”

“எதுவும் ஆகல. நீ போ.” 

அவளைப் பாராமல் எங்கோ பார்த்து அவன் பேசும்போதே ரம்யாவுக்கு புரிந்து விட்டது – இது தனக்கான ஏழரை. மேற்கொண்டு கேட்கவே பயமாக இருந்தது. அவளுக்கு அதன் காரணம் தெரியும். அந்தப் பதிலை அவன் சொல்லி விட்டால், அந்த நாளின் மொத்த மகிழ்ச்சியும்  வீணாகி விடும். நகர்ந்தாள். எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்து சொந்த பந்தங்கள் கிளம்பிய பின் மகள் இல்லாத சமயம் நாகராஜன் ரம்யாவிடம் கேட்டான் –

“மாப்பிள்ளைனாலும் அவரைத் தொட்டு கொஞ்சிட்டிருக்கறது உனக்கே நல்லாருக்கா?”

ரம்யா எதுவும் பேசவில்லை. அவளுக்கு அதிர்ச்சி இல்லை. பழகி விட்டது. நேற்றே மனம் தயாராகி விட்டது. நரம்புகள் உணர்விழந்து புண் புரையோடி இருப்பதே தெரியாமலாகி விட்ட காயத்தில் ஊசி குத்துவது போல் எந்த உணர்வும் காட்டாமல் தேநீர் தயாரித்தாள்.

“உன்கிட்டதான் கேட்கறேன்?”

“இதுக்கெல்லாம் என்கிட்ட பதில் இல்லைங்க.”

“உனக்கு பதில் சொல்லத் தகுதி இல்லைனு சொல்லு.”

தேநீர் கோப்பையை அவனுக்கு ஒன்று வைத்து விட்டு அவள் ஒன்றை எடுத்துக் கொண்டு முன்னறைக்குச் சென்று ஓரமாக சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அவன் தேநீர் கோப்பையைத் தூக்கி ஜலதாரையில் வீசும் சப்தம் கேட்டது. பற்களைக் கடித்தாள். ஒரு முறை பெருமூச்சு விட்டு தன் மொத்தக் கசப்பையும் வெளியேற்றி விட்டு தேநீரைச் சுவைக்க ஆரம்பித்தாள்.  நாகராஜன் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.

இனி இரண்டு மூன்று நாட்களுக்கு பேச்சு வார்த்தை இருக்காது. இருபத்தி நான்கு வருடங்களாக பழகி விட்ட ஒன்றுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் ரம்யா சீதை தீக்குளிப்பதை போல நிரூபிக்க நிர்பந்தப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாள். 

திருமணமாகி மூன்றாம் மாதம் நாகராஜனின் வேலை நிமித்தம் சென்னையில் தனிக் குடித்தனம் வந்தனர். அவனுக்கு ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் சூப்பர்வைசர் பணி. காலை ஒன்பது மணிக்குப் போனால் வீடு திரும்ப இரவு பத்தாகி விடும். ஆரம்பத்தில் ஒண்டுக் குடித்தனம்தான். வீட்டை விட்டுக் கிளம்பும்போது நூறு முறை “கதவைச் சாத்தி தாழ் போட்டுக்கோ” என்பான். ரம்யா அதைத் தன் மீதான அக்கறை என்றே நம்பினாள்.

ஒரு நாள் வீட்டு வாசலில் காய்கறிக்காரனிடம் வெங்காயம்  வாங்கும்போது கூடை கொண்டு போகாததால் முந்தானையை இறுக்கி மேனியில் சுற்றி தலைப்பை விரித்துப் பிடித்தாள். அவரும் காயை அதில் போட்டு விட்டு பணம் வாங்கி கொண்டார். வேலைக்கு கிளம்பி வெளியே வந்த நாகராஜன் இதைப்  பார்த்ததும் வீட்டுக்குள் சென்று விட்டான். ரம்யா கதவைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், “ஏன் முந்தானையை அவுத்து விரிக்க வேண்டியதுதானே! இன்னும் கொஞ்சம் நிறைய வெங்காயம் கிடைக்கும்ல?” என்றான்.

முதலில் சொற்களின் விவரமும் வீரியமும் புரியவில்லை. புரிந்ததும் திகைத்தாள் ரம்யா.

“என்ன முழிக்கற? வீட்ல இவ்ளோ கூடை, முறம் இருக்கு. நீ முந்தானையக் காட்டுவியா?”

“எங்க ஊர்ல எல்லாம் இப்படி வாங்கறது வழக்கம்தான்.” 

முன்பே கணவனின் கோப முகத்தை ஓரிரு முறை கண்டிருக்கிறாள். தன் ஒழுக்கத்தின் மேல் குற்றம் சாட்டும் இப்புதிய‌ முகத்தை முதன் முறை கண்டதும் கண்ணீர் முட்டியது.

“ஊர்ல காய்க்குக் காசு தருவீங்களா? இல்ல, அதுக்கும் முந்தானை விரிச்சிருவீங்களா?”

“ஏன் இப்படி பேசறீங்க? நான் ஏதும் தப்பா பண்ணலியே?”

நடுங்கினாள். தன் மீது தவறில்லை என நிரூபிக்கும் முனைப்பே அவளிடம் இருந்தது.

“இது தப்புன்னே எனக்குத் தெரியாது. இனிமே பண்ண மாட்டேன். திட்டாதீங்க.”  

கெஞ்சல் குரலில் தேம்ப ஆரம்பித்தவளை பார்த்ததும் நாகராஜன் சற்று இளகினான். 

“என்னத்த சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்களோ. இங்க பாரு, உங்க ஊரு மாதிரி இல்ல இது. யாரையும் நம்ப முடியாது. நாம நடந்துக்கறது வச்சுதான் நமக்கு மரியாதை. வீட்லயும் சரி, வெளியிலயும் சரி. புரியுதா?”

“ம்ம்ம்.”

“கடை கண்ணிக்கு போறதுனா கைல பை எடுத்துப் போ. சேலை கட்டினா இடுப்பு முதுகுனு காட்டிட்டு நடக்காம அடக்கமாக் கட்டி பழகணும். நம்ம சிரிப்பு, நடை, பேச்சு எல்லாமே ஒரு கறார்தன்மையோடவேதான் அடுத்தவங்களுக்குத் தெரியணும், அப்போதான் கெக்கேபிக்கேன்னு எவனும் வந்து வழிய மாட்டான். புரியுதா?”

சரிதான். ஆனால் இவ்விதிகளையெல்லாம் எப்போது மீறினோம் என்ற யோசனையுடன் தலையாட்டினாள். அவனது கோட்டை விட மிகையாகவே அவள் ஒரு கோடு போட்டுக் கொண்டாள். சண்டை சச்சரவு அற்ற‌ நிம்மதிதான் முக்கியம் என்ற எண்ணமே ஓடியது.

மாராப்பு விலகி இருக்கிறதா என்ற முனைப்பில் எந்நேரமும் முந்தானையை இழுத்து விட்டுக் கொண்டே இருப்பாள்.  முந்தானை முன் பக்கமும், பின் பக்கமும் கூட மூடி இருக்க வேண்டும் நாகராஜனுக்கு. தலைப்பை விரித்து பின்பக்கமும் மூடி தலைப்பின் நுனியை இடுப்பில் செருகிக் கொள்வாள். முந்தானை நுனி செருகும் இடத்தில் இடுப்பு வெளித்தெரிவதில் இரண்டு செமீ தாண்டாமல் பரிசோதித்துக் கொண்டே இருப்பாள். 

கோடுகளுக்குள் இருக்கும் வரை பிரச்சனை இல்லைதான். ஆனால் கோடுகள் ஒவ்வொரு முறையும் புதிய வட்டத்தை போட்டுக் கொண்டே வந்தன. ஒவ்வொரு புதிய வட்டமும் முந்தையதை விட ஒரு சுற்று குறுகி இருந்தது. அந்த குறுகலுக்குள் அடைபட்டு மூச்சு முட்டும் நிலைக்குத் தான் தள்ளப்படுவதை உணரச் சில மாதங்களாகின ரம்யாவுக்கு. 

ஒரு முறை ரம்யாவின் அண்ணன் வீடு வந்திருந்தான். மதியம் உண்டு உறங்கி விட்டான். வேலை முடிந்த அலுப்பில் ரம்யாவும் உறங்கி விட்டாள். மைத்துனன் வந்திருப்பதறிந்து பிற்பகலில் வீடு வந்தான் நாகராஜன். இரண்டு, மூன்று முறை கதவு தட்டிய பின்பே தூக்கம் கலைந்து வந்து கதவு திறந்தாள் ரம்யா. பின்னாடியே அண்ணனும் வந்தான்.

அவளது களைந்த தலையையும், அவனது சட்டை அணியாத தோற்றத்தையும்  அலசிய விஷப் பார்வையை ரம்யா புரிந்து கொண்டாள். அதிர்ந்து பின்னகர்ந்தாள். அவளுக்கு அந்த பார்வையின் அழுக்கு புரிந்து விட்டது. அதன் பின் அண்ணன் கிளம்பும் வரை பயந்து பயந்தே அவனிடம் பேசினாள். வீட்டில் விளையாடுவது போல் அவளது ஜடையை இழுத்து விளையாடிய அண்ணனிடம் வேகமாய் ஒதுங்கிக் கோப முகம் காட்டினாள். கிட்டத்தட்ட ‘எப்போ கிளம்புவ?’ என்று கேட்காத குறையாக அனுப்பி வைத்தாள்.

அவன் செல்லக் காத்திருந்தது போல் நாகராஜன் ரம்யாவிடம் கேட்டான் –

“கதவு திறக்க என்ன அவ்வளவு நேரம்? இதென்ன மாளிகையா? பத்து நிமிஷம் நடந்து மாடில இருந்து இறங்கி வந்து திறக்க, ரெண்டு எட்டு வச்சா திறக்கலாம்…”

“தூங்கிட்டேங்க. கேட்கல.”

“சரி, உனக்கு கேட்கல. அவனுக்குமா கேக்காது! அப்பறம் கேட்டதும் ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல கேட்குமா என்ன‌! எப்படி ஒரே சமயத்தில் வந்து திறக்கறீங்க!”

“என்ன சொல்ல வரீங்க?” – இம்முறை கொஞ்சம் அழுத்தமாகக் கேட்டாள் ரம்யா.

“உனக்குத்தான் நல்லாப் புரியுதே!”

எவ்வளவு வக்கிரம்! இவனுக்கு ஒரு தங்கை இருந்தால், நமக்கு இப்படி கற்பனை தோன்றி இருக்குமா? நிச்சயம் இல்லை. ஏன் இப்படி இருக்கிறான்? அதிர்ச்சியும் ஆற்றாமையுமாக அழுதாளே தவிர, அவனை எதிர்த்து ஏதும் பேசவில்லை. அவனை ஏன் எதிர்க்கவில்லை? உன் சந்தேகம் தப்பென்று பொட்டிலடித்த மாதிரி ஏன் கேட்கவில்லை? ரம்யாவுக்கே புரியவில்லை. அதை  வெளிப்படையாகக்  கேட்கவே அஞ்சினாள். அவன் அதை வாய் திறந்து சொல்லாதவரை, வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என நம்ப விரும்பினாள்.

அவனுக்கு தன்னை யாருடன் பார்த்தாலும் எரிகிறது என உணர்ந்து விட்டாள். அவள் யாரையாவது பார்ப்பது மட்டுமல்ல; அவளை யாராவது பார்த்தாலும் அதற்கும் அவளே பதில் சொல்ல வேண்டி இருந்த‌து. ஒவ்வொரு முறையும் பதற்ற‌த்துடன் தன் தரப்பை விளக்கி நியாயம் பெறப்  போராடுவாள். தன் தவறற்ற விஷயத்தில் விளக்கம் சொல்லும் கட்டாயமே அவளைக் கடுமையாகச் சோர்வுற வைத்தது. இளைஞன், கிழவன், நடுத்தர வயதினன், அண்ணன், தம்பி, கொழுந்தன், மாமன், மச்சான் எவனையும் அவனால் சக மனிதனாக, உறவாகப்  பார்க்க முடியாது. எவர் எனினும் தன் மனைவியைப் பெண்டாள வந்த காமுகனாகவே காணும்  மனநோய் இருந்ததை கண்டு கொண்டாள். ஒரு முறை ஒரு பதின்மப் பள்ளி மாணவன் மீது கூட அவனது சந்தேகம் பாயக் கூச்சப்படவில்லை.

எச்சரிக்கை உணர்வும் அச்சமும் அவளுக்குள் ஒவ்வொரு சம்பவத்திலும் வளர்ந்து ஒரு கட்டத்தில் வீட்டில் யாருமில்லாப் பொழுதுகளில் கூட நடுக்கத்துடனே நடமாடப் பழகிப் போனாள். உறங்கும் போதும் உடையைக் கலையாமல் காத்துக் கொண்டிருந்தன அவள் கைகள். ஜன்னல் வாசல் எல்லாம் எந்நேரமும் அடைத்து ஒரு சிறையறைக்குள் இருப்பது போல் இருந்தாள். எந்நேரமும் தன்னைத்தானே கண்காணித்துக் கொண்டே இருந்தாள்.  

அவனுடனான பொழுதுகளில் காமத்தை வெளிப்படுத்த பயந்தாள். அவன் காமத்திற்கு ஈடு கொடுக்காமல் இருக்கவும் தயங்கினாள். இரண்டிற்கும் பேச்சு வாங்கினாள். சற்று இளகி நெகிழ்ந்தால், “செக்ஸ்ல உனக்கு இவ்ளோ ஆர்வமா!” என்றான். இறுகிக் கிடந்தால் “என்னைப் பிடிக்காததாலதானே மரம் மாதிரி கிடக்க! வேற யாரைப் பிடிச்சுருக்கு?” என்றான். அவனது சொற்கள் ஒவ்வொன்றிலும் சந்தேகம் இருந்தது. சந்தேகப்படாமல் அவன் பேசும் சொற்களில் கூடச் சந்தேகம் ஒளிந்திருக்கிறதோ என்று அஞ்சினாள்.

சந்தேகம் என்ற சொல்லில் தேகத்தை நுழைந்தவன் தீர்க்கதரிசி எனத் தோன்றியது.

பிள்ளை பிறந்த பின் இது மாறும் என்ற நம்பிக்கையும் தகர்ந்தது. பிள்ளை அவனை சாயலில் உரித்து வைத்திருந்தாள். அது எவ்வளவு பெரிய நிம்மதி என்று எண்ணிக் கொண்டாள். அந்த சாயலினாலேயே அவனுக்கு மகள் மீது அதீதப் பாசம். மற்றபடி ரம்யாவிடம் அவனுக்கு முழு நேரச் சந்தேகத்திற்கு நடுவில் பகுதி நேரமாகக் காமம் அவ்வப்போது வெளிப்படும். அனுசரணையான சில சொற்களில் கூட காதலை அவளால் உணர முடிந்ததில்லை. நம்பிக்கையின்மையுடனே ஒரு காதல் மலர்ந்திருக்க முடியுமா!

இளந்தளிருக்கு வெந்நீர் ஊற்றி வளர்ப்பது போல் அவ்வுறவு கருகிக் கொண்டே வந்தது. 

நிஷா வளர வளர தனக்கு நேரும் அவமானத்தை பெண்ணும் கண்டு வளர்கிறாள் என்ற பதைப்பு அடிக்கடி தோன்றியது ரம்யாவுக்கு. அதன் விளைவு பிள்ளையும் அப்பாவைக் கண்டு தன்னை சிறுமைப்படுத்தும் அல்லது அப்பனின் அற்பக் குணம் கண்டு அவனை வெறுக்கும். இரண்டும் சரியில்லை. ஒரு சண்டையின் முடிவில் அழுதபடி சொன்னாள் –

“உங்களுக்கு இருக்கறது நோய். அதை குணப்படுத்தாம நாம நிம்மதியா இருக்க முடியாது. நாம ஒரு டாக்டரை பாக்கலாமா? அப்போதான் உங்களுக்குப் புரியும்.”

“அடி செருப்பால… நீ அவனையும், இவனையும் பாப்ப. சிரிப்ப. இதைக்  கேட்டா என்னை பைத்தியக்காரன்னு சொல்றியா?”

“சரி, அப்ப நான் போறேன்.”

“என்னடி? பயம் காட்டறியா?”

“நீங்க டாக்டர்கிட்ட வரலைனா இதுக்கு மேல உங்ககூட வாழ முடியாது.”

“என்கூட வாழாம வேற யார் கூட வாழப் போற?”

“ச்சீய், இப்பவும் பாரு. உங்க பக்கம் தப்பு இருக்கலாம்னு  ஒரு சின்னக் கோணத்தை கூட யோசிச்சு பாக்க மாட்டிங்களா?”

“என் மேல என்னடி தப்பு? நான் குடிக்கறேனா? உன்னைப் போட்டு அடிக்கறேனா? இல்ல பொம்பள சகவாசம் இருக்கா?”

“அதெல்லாம் இருக்கறவன் கூடயாவது  வாழ்ந்துடலாம். உங்கள மாதிரி சந்தேகப் பிசாசு கூட வாழவே முடியாது. நரகம்…”

“வாழ முடியாட்டி போடி. உங்க  ஊர்ல உனக்கு எவனாவது இருப்பான். அவனைப் பாக்க போறேன்னு சொல்லு. அதுக்கேன்  என் மேல பழியை போட்டுட்டு போற?”

“வா நிஷா” – பிள்ளையை தூக்க வந்தாள்.

“என் புள்ளைய தொடாத. நீ எங்கயோ போ.”

“உங்க கூட வளர்ந்தா புள்ள உங்களை மாதிரிதான் வளரும்… என்கிட்ட குடுங்க.”

“நீ வளர்த்தினா  புள்ள உன்ன மாதிரி ஊர் மேயறவளா வளரும். நீ கிளம்பு…”

ஒற்றைக் கையால் அவளைத் தள்ளிக் கதவைச் சாத்தினான். அழுது கொண்டே கிளம்பி விட்டாள். வழி நெடுக மகள் நினைவு அழுத்தியது. ஏழு வயதுப் பெண் பிள்ளையை இந்த ராட்சசனிடம் விட்டு வருகிறோம். ஊர் போனதும் அண்ணனிடம் சொல்லி பிள்ளையை வாங்கி விட  வேண்டும். சென்றதும் அண்ணி “எங்க மாப்பிள்ளை வரலையா?” என்றாள். 

“இல்லண்ணி” – சுருக்கமாகச் சொன்னாள் ரம்யா.

“ஆம்பளைங்க அப்படி இப்படி ரெண்டு வார்த்தை சொல்லத்தான் செய்வாங்க. இப்போ உங்க அண்ணன் என்னைப் பேசாத பேச்சா? முந்தா நேத்து  கூட எங்கம்மாவுக்கு ஒரு புடவை எடுக்கணும்னு கேட்டதுக்கு என்னாலதான் செலவாகுதுனு  ஒரே சண்டை. இப்போ நீ வந்துருக்க. உன்னால செலவாகுதுனு நான் சரிக்கு சரியா சண்டை போட முடியுமா சொல்லு? எல்லாம் விட்டுக் கொடுத்துதான் போயிட்டு இருக்கேன்…”

ரம்யா களைத்துப் போனாள். எதையும் எதையும் ஒப்பிடுகிறார்கள்! சண்டை வேறு, சந்தேகம் வேறு என்று அண்ணிக்குப் புரியாமல் இல்லை. வீட்டோடு தான் தங்கி விட்டால், அவர்களுக்குச் சிரமம். பொருளாதாரம், சுதந்திரம் எல்லாமே அடிபடும்.

புரிந்தது. அம்மா ரம்யாவை தனியே அழைத்து “நானே இங்க பாரம்தான். இதில் நீ வேற வந்து உக்காந்துராத. என்ன இருந்தாலும் இங்க நீ இனி விருந்தாளிதான். உன் வீட்டுக்குத்தான் முதலாளி. கிளம்பற வழியப் பாரு.” என்று ஒரு பாட்டுப் பாடினாள்.

“ஆனா எந்நேரமும் சந்தேகப்பட்டுக்கிட்டே இருந்தா எப்படிம்மா  கூட வாழறது?”

“அவருக்கு பிடிக்காததை பண்ணாத. அவ்ளோதான்.”

அண்ணன் அழைத்தான் – “ஏம்மா நாம போலீஸ்க்கு போலாமா?”

“போலீஸ்லாம் வேணாம்ணா. எப்படியாவது நிஷாவை மட்டும் வாங்கிடணும், அப்பறம் எனக்கு ஒரு வேலையும் ஹாஸ்டலும் பார்த்துக் குடுத்துரு. தனியாப் போய்டறேன்.”

“சரி. அது அப்பறம்  பாத்துக்கலாம். அவனால புள்ளைக்கு ஒன்னும் ஆகாது. நீ சாப்பிட்டு தூங்கு, நாளைக்கு நான் போய்ப் பேசி புள்ளய வாங்கிட்டு வரேன். சைக்கோ தாயோளிய போலீஸ்ல சொல்லி நாலு தட்டு தட்டினாத்தான் சரிப்படும். நீ ஏன் வேண்டாம்கற?”

“இல்லண்ணா அதெல்லாம் இன்னும் பிரச்சனைதான். நாம ஒதுங்கிடலாம்.”

மறுநாள் சென்று நாகராஜனிடம் அண்ணன்  சண்டைப் போட்டான். வெறும் வாய்ச் சண்டை அல்ல. பிள்ளையைக் கிட்டத்தட்ட பிடுங்கினான். தர மறுத்து அவன் அடிக்க அண்ணன் திருப்பித் தாக்க, அக்கம் பக்கமே போலீசை அழைத்து விட்டது. அவர்கள் சமாதானம் செய்து “பெண் குழந்தை தாயுடன் இருக்கட்டும் . பின்னர் வழக்குப்  போட்டு முடிவை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பஞ்சாயத்து பண்ணி அனுப்பி வைத்தார்கள். 

கொஞ்சம் ஆசுவாசமாகி மூச்சு விட்டு இரண்டாம் நாள் தகவல் வந்தது. நாகராஜன் வேலை செய்யும் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி. போலீஸ் வந்து ரம்யாவையும் நிஷாவையும் அழைத்தது. அந்தச் சம்பவத்தைத் தாங்கி கொள்ளவே முடியவில்லை ரம்யாவால். குற்றவுணர்வா, பயமா இன்னதென சொல்ல முடியாத அவஸ்தை. அண்ணன் தடுத்தும் ஓடினாள். மருத்துவமனையில் உபசரித்தாள். 

அண்ணி வந்து கண்டு, “உன்னை பிரிஞ்சு ரெண்டு நாள் கூட இருக்க முடியாத மனுசனப் புரிஞ்சுக்காம இருக்கியே” என்றாள். ரம்யாவுக்கே கூட சந்தேகம் வந்தது, தனக்குத்தான் கணவனின் அன்பு புரியவில்லையோ! அவனுக்கு ஏற்ப நடந்து பார்த்தால்தான் என்ன? 

ஏழு வயது நிஷாவுக்கு அப்பா சாக முடிவெடுத்து விட்டார் என்பது அழுத்தமாக பதிந்து விட்டது. அப்பாவை முன்பே மிகப் பிடிக்கும் என்பதை விட இந்த பாதிப்பு – அவரை எதற்கும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் – என்ற எண்ணமாக வேரூன்றி விட்டது.

வளர வளர தாய் – தகப்பன் சண்டையில் எப்போதும் தகப்பன் பக்க‌ நியாயத்தை எடுத்துக் கூறுபவளாக மாறினாள் நிஷா. அவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்த ரம்யா வில்லியாக நினைவில் பதிந்து போனாள். அதை வெளிப்படையாகச் சொன்னதில்லை என்றாலும் சில பல நேரங்களில் அந்த ஜாடைகள் நிஷாவிடம் வெளிப்பட்டதுண்டு.

“கத்திரிக்காய்தான்  அப்பாக்கு பிடிக்காதுனு தெரியும்ல? அப்பறமும் ஏன் பண்ற?”

“எனக்குப்  பிடிக்குமே!”

“உனக்கு பிடிச்சா  நீ தனியா செஞ்சுக்கோ. அப்பாக்கு பிடிச்சதை அப்பாக்குக் குடு.”

“நேரம் வேணும்ல நிஷா? வேலைக்கும் போகணும்.”

“எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லும்மா நீ. அதனாலதான் அப்பாவுக்கும் கோபம் வருது.”

பலத்த அடியால் பாதிப்பான உடல் சரியாக நாகராஜனுக்கு ஒரு வருடமாகி விட்டது. பொருளாதார நெருக்கடியால் ரம்யாவும் ஒரு நகைக்கடைக்கு  வேலைக்குப்  போக ஆரம்பித்திருந்தாள். படுக்கையில் இருந்தபடியே நாகராஜன் உத்தரவு போடுவான்.

“வேலைக்கு போற கடைல ஆம்பளைங்களும் இருக்காங்களா?”

“ம்ம்ம்.”

“தேவை இல்லாம ஒரு வார்த்தை பேசாத. ஆம்பளைக்கு எல்லாமே சிக்னல்தான்.”

“ம்.”

“எதுக்கு அயர்ன் பண்ற? கசங்கின சேலைல போனா சைட் அடிக்க மாட்டாங்களா?”

உடைகளை அயர்ன் செய்வதை நிறுத்தி விட்டாள்.

“எதுக்கு இவ்ளோ பூ? வேலைக்குத்தானே போற?”

“இன்னிக்கு என்ன புது சேலை?”

“என்ன இன்னிக்கு வரும்போதே சிரிப்பா இருக்கு? வேலைல ரொம்ப சந்தோஷமோ!”

ஒவ்வொரு நாளும் அழுது வடிந்த தோற்றம் பூசித் தன்னை அலங்கரித்தாள். உற்சாகம், சிரிப்பு வற்றி முகமே சோகமாகிப் போனது. அதையும் மீறி இளமையாகத் தெரிந்தாள்.

ஓராண்டுக்குப் பின்னும் நாகராஜனால் கடின வேலைகள் செய்ய முடியாமல் போனது. முன்பு வேலை பார்த்த கடையில் சின்ன வேலைகளுக்கு அமர்த்திக் கொண்டனர். எனவே ரம்யா தன் வேலையைத்  தொடர்ந்தாள். உள்ளபடியே ரம்யா கணவனின் அந்நிலைக்கு மகிழ்ந்தாள். அத்தனையிலும் ஒரே நன்மை ரம்யா வேலைக்கு போனதுதான். வீட்டின் வறுமைக்காக ரம்யா மகிழ்ந்தாள். உலகில் யாராவது இதற்கு மகிழ்ந்திருப்பார்களா என்று தெரியவில்லை. இல்லையெனில் இருபத்து நான்கு மணி நேரமும் நாகராஜனுடன் செலவழிக்க வேண்டி இருந்திருக்கும். வேலை இடத்தில் கொஞ்சம் சிரிக்க முடிந்தது. பணி அழுத்தத்தில் கவலைகள் மறந்து ஆழ்ந்து போக முடிந்ததே ஆசுவாசம் தந்தது.

ஆனால் விபத்தின் விளைவாய் நாகராஜனின் இயலாமை தாம்பத்தியத்தில் வெளிப்பட, நாகராஜனின் தாழ்வு மனப்பான்மை கொடூர விஷமாக இன்னும் மோசமாக மாறியது. எல்லாவற்றையும் காதுகளுடனே நிறுத்தி விட ரம்யா பழகி இருந்தாள். மனதிற்குள் எதையும் கொண்டு போகவில்லை. ரம்யாவுக்கே அது மிக‌ ஆச்சரியமாக இருந்தது.

எதையெல்லாம் சகிக்கவே முடியாது என்று எண்ணி இருந்தாளோ  அதை எல்லாம் இயல்பென்று ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டாள். மகள் முன் வைத்து அவமதிப்பாக பேசும்போது மட்டும் சில நேரங்களில்  கத்தி விடுவாள். அப்போதும் நிஷா “ஏன்மா அப்பாவைப் பத்திதான் தெரியும்ல, கொஞ்சம் அமைதியாத்தான் போயேன்” என்பாள்.

அவளுக்கு அறியாத வயது என்பதால் ரம்யாவால் அவனது சொற்களின் வீரியத்தை விஷத்தை மகளிடம் எடுத்துச் சொல்ல முடியவில்லை. ஆண்டுகள் போய் நிஷாவுக்கே புரியும் பருவத்திலும் மகள் அவளைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த வலி அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. இது தரும் மூச்சுத் திணறல் அவளுக்கு எட்டவே இல்லை.

இடையில் ஒரு காதலும் வந்து போனது ரம்யாவிற்கு. உடன் பணிபுரிந்தவனை மிகப் பிடித்திருந்தது. அவனது பேச்சும், சிரிப்பும், அக்கறையும், அன்பும் என அவனைப் பற்றிய எண்ணமே அவளுக்குச் சொர்க்கமாக இருந்தது. ஆனாலும் தன் விருப்பத்தை சொல்லாமல் தவிர்த்து வந்தவளிடம் அவனே, “விவாகரத்து செய்து விட்டு வா. நாம் சேர்ந்து வாழலாம்” என்று கேட்டான். மகளையே காரணமாக்கி அவனை விலகினாள்.

மகளுக்காகக் கணவனுடன்  சேர்ந்து வாழ்ந்தாள், மகளுக்காக பிடித்தவனை உதறினாள். மகளுக்காக மகளையும் அனுசரித்தாள். மகளுக்காக என்றே ஒவ்வொரு நிலையையும் கடந்து வந்தவள் ஒரு கட்டத்தில் மகளை மணம் செய்து கொடுத்ததும் நாகராஜனைப் பிரிந்து விட வேண்டும் என முடிவு செய்தாள். தீர்மானித்து ஆறேழு ஆண்டுகளாயிற்று. 

அந்த நாளுக்காக ரம்யா காத்திருந்தாள். நீண்ட சிறை தண்டனையை அனுபவிப்பவன் விடுதலைத் தேதி அறிந்து அந்நாளுக்குக் காத்திருப்பது போல. ரம்யாவுக்கு நிஷாவின் புரிதல் குறைபாட்டில் இப்போது வருத்தமில்லை. நாற்பதுகள் கடந்தும் சந்தேகத்திற்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதன் வலி தெரியாத குழந்தை அவள். அவளுக்கு அவன் அந்த முகத்தைக் காட்டவே இல்லை. அவளது விருப்பத்திற்கு உடை அணியலாம். ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்து காட்டினால், “சூப்பரா இருக்குடா” என்பான். எனவே ரம்யாவின் ரணம் நிஷாவுக்கு விளங்காததில் வியப்பில்லை. ஒரு மிமீ அதிகம்  புன்னகைக்கக் கூட கள்ளக் காதலனுக்கு கடிதம் எழுதுவது போல தனிமையில் சென்று சிரித்துக் கொள்ள நேரும் கொடுமையைச் சந்தேகத் துணை அமையாத யாராலும் புரிந்து கொள்ள முடியாது. 

நிஷாவின் திருமணம் முடிந்தது. ஓரளவு சிறப்பாகவே நடந்தேறியது. ஒரு மாதம் கழித்து பின் ரம்யா மகளைத் தனியே வீட்டிற்கு அழைத்தாள்: “நான் அப்பாவை விட்டு பிரியறதா முடிவு செஞ்சிருக்கேன் நிஷா. அடுத்த வாரம் ஒரு நாள் வக்கீலைப் பாக்கப் போவேன்.”

“என்ன உளறிட்டு இருக்க? ஏன் திடீர்னு?”

“திடீர்னு இல்ல‌. பல வருசமாவே காத்திருந்தேன். உன் கல்யாணம் முடியணும்னு.”

“நீ ஒரு சுயநலவாதிம்மா.”

“ஏன் நிஷா?”

“என் கல்யாணம் முடிஞ்சா அப்பா தனியா ஆகிடுவார்னு தெரியும். அவரை விட்டுட்டு போய்ப் பழி வாங்க இத்தனை நாளாத் திட்டம் போட்டுக் காத்துட்டு இருந்தியா?”

“உனக்கு அது எப்போவும் புரியப்போறதில்ல நிஷா. உன்னை தனியா விட்டுட்டு போய்ட கூடாதுன்னுதான் காத்திருந்தேன். இப்போ உனக்கொரு வாழ்வு அமைஞ்சுருச்சு…”

“ரொம்ப நல்லவதான். ஏன் என் கல்யாணத்தோட உன் பொறுப்பு முடிஞ்சுதா? இனி தலை தீபாவளி பொங்கல், முதல் பிரசவம்னு எவ்ளோ இருக்கு? அதெல்லாம் யோசிச்சியா? இல்ல தெரியாம கேட்கறேன். இப்ப உனக்கு இத்தன வயசுக்கு மேல எதுக்கு டைவர்ஸ்?”

“நிம்மதியா வாழ.”

“புருசனை விட்டுட்டு என்ன நிம்மதி? என் மாமியார் வீட்ல என்ன நினைப்பாங்க?”

“…”

“உங்கம்மா இப்ப எதுக்கு புருசனை விட்டுப் பிரியறாங்கனு யோசிக்க மாட்டாங்களா?”

“அதனால அவங்களுக்கு என்ன பாதிப்பு?”

“மருமக வீடு கௌரவமானதுன்னுதானே என்னைக் கட்டினாங்க. அது போயிரும்ல?”

“நிஷா, நீ என்னை புரிஞ்சுக்கவே மாட்டியாடி? நீ குழந்தையா இருக்கும்போது உனக்கு அப்பா வேணும்னு சகிச்சுக்கிட்டேன், வளர வளர உனக்கு அந்த ஆள் மேல இருக்கற பாசத்தால் பிரிக்க வேண்டாம்னு நினைச்சேன். எனக்கு வேற வாய்ப்பு வந்தப்போ கூட உன்னை யோசிச்சு மறுத்தேன். இப்போ உனக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திட்டு நான் விலகறேன்னு சொல்றேன். என் கடமை எதையும் நான் தட்டிக் கழிக்க மாட்டேன்.” 

“இப்போதான் புரியுது. வாய்ப்பு வேற வந்ததா? அப்பா சொல்ற மாதிரி ஏதாவது இருக்குமோனு எனக்கும் இப்போ சந்தேகம் வருது. இல்லைனா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு யாராவது டிவோர்ஸ் அப்ளை பண்ணுவாங்களா?”

ரம்யா மகளை உற்றுப் பார்த்தாள்: “நீ உங்கப்பா சாயல்ல இருக்கேனு நினைச்சேன். உங்கப்பன் குணத்தோடவும்தான் பொறந்திருக்க. என் முடிவில் மாற்றமில்லை.”

“அப்போ என் புருஷன் வீட்ல கேட்டா?”

“இத்தனை வருஷம் உனக்காக நான் இந்தப் புகுந்த வீட்டை சகிச்சேன்ல? இனி நீ எனக்காக உன் புகுந்த வீட்டை சகிச்சிக்கோ. சமாளிச்சுக்கோ.”

“நீ எல்லாம் ஒரு அம்மாவா?”

“ஒரு அம்மாவா நான் எப்போவும் உனக்காக இருப்பேன் நிஷா. ஆனா என் முடிவில் பின்வாங்க மாட்டேன்.”

“இனி நீ எனக்கு அம்மாவும் இல்லை. நான் உனக்குப் பொண்ணும் இல்லை. அப்பா மட்டும் போதும் எனக்கு.”

ரம்யா எதுவும் பேசவில்லை. நிஷா கோபமாகக் கிளம்பி விட்டாள்.

அன்றிரவு நிஷா தன் கணவனுடன் கலவி முடிந்து உறங்கிச் சில மணி நேரங்களில் உலுக்கி எழுப்பப்பட்டாள். பதறி எழுந்து புரியாமல் விழித்தவளிடம் அவள் கணவன் செல்பேசியைக் காட்டினான். பெண் முகம் மறைக்கப்பட்ட ஒரு பாலியல் வீடியோ. 

“இவ போட்ருக்கற டாப்ஸ் மாதிரியே உன்கிட்ட ஒன்னு இருக்குல்ல?”

“ஆமா. ஆனா  இதை எல்லாமா பாக்கறீங்க? ஸ்கேண்டல் பாக்கறது தப்பு.”

அவன் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. மும்முரமாக மீண்டும் கேட்டான்.

“ஏய்… அந்தக் கொலுசு கூட உன்னுது மாதிரியேதான் இருக்கு, பாரேன். உனக்கு உள்ளங் கால்ல ஒரு மச்சம் இருக்கா?” – இன்னும் வீடியோவிலிருந்து அவன் கண் எடுக்கவில்லை.

மறுநாள் காலை அம்மாவை அழைத்தாள் நிஷா. ‘

“அம்மா வக்கீலைப்  பாக்கப் போறியா?”

“ஆமாம். என் மனசை மாத்தப் பாக்காத, நிஷா.”

“இல்லம்மா. நானும் வரேன். ரெண்டு பேரும் பாக்கலாம்.”

 

Author

Related posts

டயானா ஹேர் கட்