தமிழே! அமிழ்தே! – 9

This entry is part 9 of 9 in the series தமிழே அமிழ்தே

கடந்த வாரம் வேற்றுமை உருபுகளில் எங்கெல்லாம் ஒற்று மிகும் அல்லது மிகாது என்பதைப் பார்த்தோம். குறிப்பாக இரண்டாம் வேற்றுமை உருபான , நான்காம் வேற்றுமை உருபான கு– இவை வெளிப்படும் இடங்களில் வல்லெழுத்து மிகுத்து எழுதுவதனால் நாற்பது விழுக்காடு ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க இயலும்.

இப்போது மேலும் சில இடங்களில் ஒற்று மிகும் / மிகாது என்பதைப் பார்ப்போம்.

காட்டாக,

மொழி, பற்று என்கிற இரு சொற்களில் முதலாவதை நிலைமொழி என்போம். இரண்டாவது சொல்லை வருமொழி என்போம்.

மொழி என்கிற நிலைமொழி இ என்கிற எழுத்தில் முடிந்து வருமொழி (பற்று) வல்லினத்தில் தொடங்கும் போது வல்லொற்று மிகும். அவ்வகையில் மொழிப்பற்று என்று ஆகும். இதனை இயல்பாய் நின்ற உயிரீற்றின் முன் வல்லினம் மிகும் என்று புரிந்து கொள்க.

இன்னொரு எடுத்துக்காட்டு: தங்கம் + சுரங்கம் = தங்கச் சுரங்கம்.
நிலைமொழி தங்கம் என்பதில் ஈற்றெழுத்து ம் நீங்க, க (க்+அ) உயிரெழுத்து இறுதியில் நிற்கும். இப்போதும் ஒற்று மிகுந்து தங்கச் சுரங்கம் என்று வரும்.

நிலைமொழி ய் ர் ழ் என்னும் மெய்களுள் நின்று வல்லின வருமொழி வரும் போதும் ஒற்று மிகும்.

காட்டு: தமிழ்ப்பற்று, தாய்குலம், போர்த்தொழில் (இத்தலைப்பில் திரைப்படம் வந்தபோது ஒற்று மிகாமல் தலைப்பிட்டனர்! ஏனோ)

ஆனால் நிலைமொழியில் வருவது பெயரெச்சத் தொடர் எனில், நிலைமொழி உயிரெழுத்தில் முடிந்து வருமொழி வல்லினத்தில் தொடங்கினாலும் ஒற்று மிகாது. காட்டு: படித்த பையன், எழுந்த பந்து

சுட்டுச் சொற்களில் ஒற்று மிகும். காட்டுகள் சில

அப்பக்கம்
அந்தக் கருத்து
எங்குச் சென்றாய்
எங்கே சென்றாய் என்று நிலைமொழி ஏ-காரத்தில் முடிகையில் ஒற்று மிகாது.

அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றின் பின் ஒற்று மிகும். அப்படிப் பார்க்காதீர்கள்.

ஆனால் படி என்னும் இடைச் சொல்லின் பின் வலி மிகாது.

சட்டப்படி தப்பில்லை.

இன்றைய வெண்பா:

காதலும் கழுதையும்

உன்னைப்போல் ஏதொன்றும் ஊரில் அழகில்லை
இன்னிசைப் பாட்டிலும் ஏதிணை – முன்னால்
‘கடி’கள் தருகின்ற காதல் கழுதை
படிப்பேன் உனக்கொரு பா

வெண்பா கற்றுக்கொண்ட போது எழுதியது. (விளக்கம் வேண்டாம் தானே)

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே! அமிழ்தே! – 8

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

Related posts

அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)

உப்புக் காற்று

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம்