இயற்கைப் பாடம்

கைப்பிடி உணவும் கண்டாலும்
தன் இனம் கரைந்தழைத்து
கூடி உண்ணும் காக்கை;

கூட்டுக்குள் புழுவாய் ஒடுங்கினாலும்
கடுந்தவமிருந்து ஒரு நாள்
வண்ணச் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி;

இனத்தில் ஒன்று அடிபட்டால்
பதறித் துடித்துச் சுற்றி
உதவிக்காகப் பரிதவிக்கும் குரங்கு;

வீழும் பயம் விடுத்து
சேய் விண்ணில் பறக்க
பயிற்றுவிக்கும் தாய்க் குருவி;

நிறம் கருப்பென வெட்காமல்
வேங்குழலொத்த தீங்குரலால்
பெருமிதமாய்ப் பாடும் குயில்;

அயராதுழைத்து சேர்த்து வைத்தால்
இயலாத காலத்தில் பயனாகும்
என்றுணர்த்தும் எறும்புக் கூட்டம்;

ஆக,
இயற்கைப் பாடம் உணர்த்துவதோ
வாழ்வில் செம்மை பெற
உயிரினங்களை வாசிக்க வேண்டும்!

Author

  • கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

Related posts

அனைவரும் சமம்

வாழ்த்துகிறோம்

ஊர்வலம் போன பெரியமனுஷி