பூனை பூனைதான்.
பாட்டி வீட்டில் ஒருபூனை
பலநாளாக வசித்ததுவே.
ஊட்டும் பாலும் பழத்தையுமே
உண்டு நன்கு கொழுத்ததுவே.
ஒருநாள் அறையில் கண்ணாடி
ஒன்று இருக்கக் கண்டதுவே.
விரைவாய் அருகில் சென்றதுவே;
விறைத்து அதனில் பார்த்ததுவே.
கறுத்த நீளக் கோடுகளும்
கனத்த உடலும் கண்டதுமே,
“சிறுத்தை நான்தான். எவருக்கும்
சிறிதும் அஞ்சிட மாட்டேனே!”
பூனை இப்படி எண்ணியதே.
புலியாய்த் தன்னை நினைத்ததுவே.
பானை சட்டி யாவையுமே
பாய்ந்து, உடைத்து நொறுக்கியதே.
ஆட்டம் போட்டு வீட்டினையே
அதிரச் செய்தது, புலிபோலே.
பாட்டி அங்கே வந்திடவே
பாய்ந்தது பூனை அவள்மீதும்!
பாட்டி கோபம் கொண்டனளே.
பக்கம் கிடந்த துடைப்பத்தால்
போட்டாள் பூனை தலைமேலே,
“பொத்”தென உதைகள், புத்திவர
அடியைத் தாங்க மாட்டாமல்
அங்கே பூனை படுத்த துவே.
“கொடிய புலியாய் எண்ணியதே
குற்றம் குற்றம் குற்றம்தான்!
பூனை என்றும் பூனைதான்.
புலியாய் மாற முடியாது”
தானே இப்படி எண்ணியதே;
சாது வாக மாறியதே!
********************************************************************************
நாயின் நன்றி
பணத்தில் மிக்க ஒருவரது
பையன் ஒருநாய் வளர்த்தனனே,
குணத்தில் மிக்கது அந்நாயும்.
குற்றம் எதுவும் செய்யாதாம்.
நாயைக் கண்டால் தந்தைக்கு
நஞ்சைக் கண்டது போலேயாம்.
வாயை விட்டுக் கோபமுடன்
வார்த்தை கூறி வைதிடுவார்.
“சோற்றுக் கில்லா நாளையிலே
சோறு போட்டு இந்நாயைப்
போற்று கின்றாய், உன்போலப்
புத்தி கெட்டவன் எவனுளனோ?”
என்றே தந்தையும் கூறிடுவார்,
என்னே செய்வான் பையனுமே!
நன்றி யுள்ள அந்நாயோ
நகரா தங்கே இருந்ததுவே.
உற்சவம் ஒன்று பக்கத்து
ஊரில் நடந்தது, கண்டிடவே,
உற்சா கத்துடன் எல்லோரும்
ஒன்றாய்க் கூடிச் சென்றனரே.
தள்ளா வயது ஆனதனால்
தந்தை மட்டும் போகவில்லை.
கள்ளன் ஒருவன் இரவினிலே
கதவைத் திறந்துள் ளேசென்றான்.
பந்தம் ஒன்றை வாயினிலே
பலமாய் வைத்துத் தூணுடனே,
தந்தை தன்னைக் கட்டியபின்
தங்கம் வெள்ளி திருடினனே.
“சட்”டென அங்கே நாய்வந்து
தாக்கிய தந்தத் திருடனையே.
வெட்டிய காயம் போலவேதான்
மேலெலாம் புண்கள் ஆயினவே.
குரைத்ததன் சத்தம் கேட்டதுமே
கூடியே ஊரார் வந்தனரே.
விறைப்புடன் ஓடிய திருடனையே
விரட்டிப் பிடித்து உதைத்தனரே.
தன்னுடை உயிரும் தப்பியதே,
தங்கம் வெள்ளி நகையுடனே.
நன்றி மிகவும் உள்ளதென
நாயைப் புகழ்ந்தார், தந்தையுமே.
மனமகிழ் வுடனே அந்நாயை
மகனினும் மேலாய்ப் போற்றினரே.
தினமும் சோறு வைத்தனரே.
தின்னுதல் கண்டு மகிழ்ந்தனரே.