நட்சத்திரப் பூத்தையல்
காலத்தறி நெய்த
இன்னுமொரு இரவு.
கண் திறவா
பிள்ளையின்
இதழ் சிரிப்பாய்
வெள்ளி குழைத்த
நிலாத்துண்டு.
இலைகள் சொருக
மலர்களோடு
தீரா விளையாட்டில்
கள்ளக்காற்று.
செவிப்பறை தட்டும்
சில்வண்டுகளின்
செல்லச் சிருங்காரம்
உறக்கம் உதறிய
கருவிழிக்குள் புதையுமோ
வெளித் தாவி குதிக்குமோ
மருகித்திரளும் என்
விழித்துளி
எப்போது வருவாய்
நீ?