ஆளை அழகாய்க் காட்டுமே
ஆசை நெஞ்சில் கூட்டுமே
முன்னே நிற்கும் எதனையும்
முழுதாய்க் காட்டும் கண்ணாடி
வள்ளுவரின் கூற்றைப் போல்
வாய்மை மறப்பதில்லையே
கள்ளமற்ற செயலையே
கருத்தில் நிறைக்கும் கண்ணாடி
துணடு துண்டாய் உடையினும்
தொழிலைச் செய்யும்கண்ணாடி
கண்டு மகிழும் யாவரும்
கவனம் வைப்போம் கடமையில்.
2
காணும் திசையெலாம் கைப்பேசி
கவனத்தைக் கூட்டும் கைப்பேசி
பேணும் வாழ்வெலாம் உடன்வந்து
பெரிதென உயர்த்திடும் கைப்பேசி
உறவைப் பேண உற்ற துணை
உலகைக் காண விரியும் திரை
பறவை போல சிறகை அடித்து
பாரினில் உயர்த்திடும் வழிகாட்டி.
காட்சியும் கருத்தும் கைக்கொண்டு
கல்வியை விதைக்கும் கைப்பேசி
ஆட்சி செய்யும் அழகு கண்டு
அடிமையானால் அவலம் நமக்கே.
இருமுனைக் கத்தியென கைப்பேசி
இருப்பதை அறிந்து செயல்படுவோம்
பொறுப்பினை உணர்த்தும் அறிவோடு
பிள்ளையிடம் கவனம் வைத்திடுவோம்
-
கி. சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர். பிறப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் பழநிக்கு அருகில் அய்யம்பாளையம். இருப்பு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் நரசிங்காபுரம். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, புன்னகை, ஏழைதாசன், தமிழ்ப் பல்லவி, தினத்தந்தி, தினபூமி, மனித நேயம், புதிய உறவு, புதிய ஆசிரியன், உரத்த சிந்தனை, வானவில்,பொற்றாமரை போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நூல் விமர்சனங்களில் நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு இணைய இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் விமர்சனக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 1.மின்மினிகள்(1999)
2.தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022)
3.தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)
4.அன்பு மொழி(2024)
5.மீன் சுமக்கும் கடல் (2025)
என ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
கோவை மேன்மதி மன்றம் இவருக்கு "தாய்த் தமிழ் காவலர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் நடத்திய கவியரங்கங்களில் கலந்துகொண்டு கவி பாடியுள்ளார். உடுமலை இலக்கியக் களம் என்ற அமைப்பின் செயலாளராகப் பணிபுரிகிறார்