நல்லாச்சி – 12

This entry is part 12 of 17 in the series நல்லாச்சி

பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்கு
சூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்கு
தென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்து
கருநாகம் போல் பின்னலிடும் வயது வரை
விதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்
சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்
தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்
குழந்தை மீனாட்சியாய் வரித்து
சுற்றிப்போட்டும் கொள்கிறாள்

பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா என
தாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறது
அந்தப் பூப்பிசாசிற்காக
எனினும்
தங்கத்தட்டாய் மலர்ந்திருக்கும் சூரியகாந்தி மேல்
ஆயிரம் கண் வைத்திருக்கிறாள் பேத்தி
தராமல்
சிட்டாய்ப்பறக்கும் மாமனை
வீடு காடு எங்கிலும் துரத்திக்கொண்டு ஓடுகிறாள்
நாவுலர்ந்து மூச்சு வாங்க
தட்டட்டியில் ஒளிகிறான் மாமன்
கூந்தல் பறக்க நிற்கிறாள் பேத்தி
ஓர் இசக்கியென

“அதை வித்துக்கு விட்டிருக்கு மக்களே
ஒரு பூவிலிருந்து ஓராயிரம் செடிகள்
பல லட்சம் சூரியப்பூக்கள்
காடெங்கும் மலையெங்கும் சூரியனாப்பூக்கும்
கைகொள்ளாமல் அள்ளிக்கொள்வாய் நீ”
சமாதானப்படுத்திய நல்லாச்சியின் வாக்கால்
சன்னதம் நீங்கி அமைதியடையும் பேத்தியின்
கண்முன் விரிகிறது
அடிமுடி காணவொட்டா ஒரு சூரியக்காடு.

Series Navigation<< நல்லாச்சி – 10நல்லாச்சி – 13 >>

Author

Related posts

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

ஜப்பானிய சிறுவர் கதைகள் 6 – மொழியாக்கம்

தமிழே அமிழ்தே – 4