நல்லாச்சி – 23

This entry is part 23 of 27 in the series நல்லாச்சி

பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்கு
நயந்தும் பயந்தும்
பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்
கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்க
வழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம்

இமயமலை பற்றி விளக்கினால்
‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்
மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்
‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்
ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்
‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்
ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி

பனிச்சறுக்குக் கனவில் குதித்துக்குதித்து
பாவனையில் நடந்த பேத்தி
வாய்க்கால் சேற்றில் கால் இடறுகிறாள்
சில அடிகள் சறுக்கிவிழுகிறாள்
‘கனவில் கண்ட வயலை
விழித்ததும் அறுக்கப்போனாளாம் ஒருத்தி
பனியென்று எண்ணினாயோ சேற்றை’
கடிந்த நல்லாச்சி
இழுத்துச்செல்கிறாள் ஆற்றங்கரைக்கு
பனிப்பொம்மை வேண்டிய பேத்தி
சேற்றுப்பொம்மையாய் நிற்கிறாள்
வேடிக்கை பார்க்கின்றன அத்தனை மீன்களும்.

Series Navigation<< நல்லாச்சி – 22நல்லாச்சி – 24 >>

Author

Related posts

வலைப்பூ – 3

அம்மா மாறி விட்டாள்

இனியவன் – 5 (இறுதிப்பகுதி)