நல்லாச்சி – 19

This entry is part 19 of 20 in the series நல்லாச்சி

விருந்தொன்று வந்திருக்கிறது
நல்லாச்சி வீட்டுக்கு
அன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்
எனினும்
இருண்டதும்
பேத்தியின் மேல் அன்பு
சற்றே வறண்டதும் கூட

வந்த நாள் முதல்
அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்
உறவின் பெயரால்
தலைமேல் தாங்குகின்றனர்
அன்பின் பெயரால்;
பேத்தியின் நனையும் கண்களையும்
வெதும்பும் நெஞ்சத்தையும்
மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்
கண்ணுறாதவளல்ல நல்லாச்சி
வந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல

எல்லை மீறிய ஓர் நாளில்
அருகிருத்தி உரைக்கிறாள் உறவிடம்
உன் மடி நிரம்பி வழிகிறது
என்னிடமிருப்பதோ ஒன்றே ஒன்று
மதிப்பறிந்தும் அலட்சியப்போக்கு
முறையோ? என்கிறாள்
உறவின் காயத்துக்கு மருந்திடுகிறாள்
மெல்ல மெல்ல ஆறத்தொடங்குவது
உறவின் கண்ணீரால் தெரிகிறது
தழும்பும் மிச்சமின்றிப்போகுமென்பது
சொல்லாமலே புரிகிறது
பெருமூச்செறிகிறாள் நல்லாச்சி
விடியலுக்கு
மீதமிருக்கும் தூரத்தை எண்ணி.

Series Navigation<< நல்லாச்சி – 18நல்லாச்சி – 20 >>

Author

Related posts

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்