நல்லாச்சி – 20

This entry is part 20 of 20 in the series நல்லாச்சி

தொலைத்த இடத்தில்தான் தேடணும்
என்கிறாள் நல்லாச்சி
தினமும் ஏதேனுமொன்றைத்
தொலைக்கும் பேத்தியிடம்
அவள்
எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்
மந்திரக்கோலன்றோ நல்லாச்சி
எனினும்
அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள்

பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்தி
ஒருநாளில்
நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்
பிரிவென்ற பெயரில்;
அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்
பெற்றோரின் அன்போ
உற்றாரின் அன்போ
இன்னபிற களித்தோழரின் அன்போ
இணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றன
தூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்தி
மாற்றமொன்றே மருந்தாகும் என்கிறாள் நல்லாச்சி

முற்றத்தில் மேய வரும் பறவைகள்தாமும்
அன்பைச்சொரிகின்றன அவள்மேல்
மயிலிறகுகளாய் தூவியாய்
கொஞ்சுமொழிகளும் கீதங்களுமாய்
நனைக்கின்றன பேத்தியை
துளித்துளியாய் உயிர்க்கிறாள் அவள்
தொலைக்காத இடத்திலும் கிடைக்கலாமென
புரிந்து கொள்கின்றனர்
ஆச்சியும் பேத்தியும்.

Series Navigation<< நல்லாச்சி – 19

Author

Related posts

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்