சுமார் 25 முன்பு தனியார் வங்கிகள் இந்திய சந்தையில் பரபரப்பாக செயலாற்ற தொடங்கிய பின் பெரும்பாலானோருக்கு அது பிடித்த ஒன்றாக மாறியது. அது வரையில் அரசு வங்கிகளிலேயே பண பரிவர்த்தனை செய்து வந்தோருக்கு நுழைந்ததுமே குளுகுளு ஏசியுடன் கணினி மயமாக்கப்பட்ட வங்கி சேவை நுனி நாக்கு ஆங்கில பேச்சு உடன் கிடைத்த பொழுது பண பரிவர்த்தனையில் புரட்சிகரமான மாற்றம் நிகழ தொடங்கிவிட்டதாக பலர் சொன்னார்கள். இன்றைய தேதியில் வங்கிகள் பற்றியும் அதன் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனை பற்றியும் எல்லோருக்கும் தெரியும். தெரியாவிட்டாலும் இது இப்படியாக நடக்கிறதென ஒரு புரிதல் மக்களிடத்தில் இருக்க தான் செய்கிறது.
இன்றைய நவீன காலத்தில் வங்கி சேவைகள் பற்றி தெரியும். ஆனால் அந்த காலத்தில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் பண பரிவர்த்தனைகள் எப்படி நிகழ்ந்திருக்கும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது. பொது புத்தியில் கடன் வழங்குவோர் அதனை பெறுகிற நபர்கள் இருந்தார்கள் என்பது கதைகள் மூலமாகவும் பழமொழி மூலமாகவும் தெரிந்துகொள்ள முடியும்.
உதாரணமாக கடன் பெற்றோர் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணாசல கவிராயர் பாடி இருக்கிறார். அதாவது இராமாயண கதையில் ஒரு கட்டத்தில் செய்வது அறியாது இராவணன் நெஞ்சம் கலங்கினானாம்.
கடன் பெற்றவரின் நெஞ்சம் என்பது எத்தகைய பதைபதைப்புடன் இருக்கும் இருக்கும் என்பதற்கான உதாரணம்.
மேலும் வருமானம் செலவு அதன் மூலம் வரகூடிய கடன் பிரச்சனை ஆகியவை எல்லாம் திருவள்ளுவர் காலத்திலேயே சாதாரணமாக வழக்கத்தில் இருந்துள்ளது என்பதை ஒரு குறளின் வழியாக தெரிந்துகொள்ள முடியும். அது
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
வருமானம் குறைவாக இருப்பினும் அதற்கேற்றது போல் செலவுகள் இருந்தால் பிரச்சனையில்லை என்கிறது இந்த குறள். இதன் மூலம் அக்காலத்தில் பலர் வருமானத்திற்கு மீறி செலவு செய்து கடனாளி ஆகிகொண்டு இருந்தார்களென்று புரிந்து கொள்ள முடியும்.
அதே போல் இன்னொரு குறள்
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
இதில் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால் வாணிகம் செய்வோர் பிற வாணிகரது பொருளையும் தமது பொருள் போல கருதி பாதுகாக்க வேண்டும்.
இது தவிர்த்து அக்காலத்திய வாணிகம் பற்றியோ பண பரிவர்த்தனை பற்றியோ பெரியதாக தகவல்கள் இல்லை. ஆனால் பண்டமாற்று முறை பற்றி சிலபல தகவல் இருக்கிறது. குறிப்பாக
“மீன்நொடுத்து நெல்குவைஇ.
மிசை யம்பியின் மனைமறுக்குத்து”
என்கிற இந்த புறநானூற்று பாடலில் மீனுக்கு மாற்றாக நெல்லை பெற்றதை பற்றிய குறிப்பு இருக்கிறது.
சங்ககால பாடல்களில் வாணிகம், பொருளாதாரம் பற்றிய குறிப்பு பெரிதும் இல்லை. அதற்கென்று இந்திய நிலபரப்பில் பண பரிவர்த்தனை, வாணிகம் நிகழவில்லை என சொல்ல முடியாது. அவைகளை யாரும் பதிவு செய்யவில்லை என சொல்வதே சரி.
ஏன் இந்த நிலையென பார்த்தால் பக்தி இலக்கியங்கள் இலக்கியங்களை பதித்து வைத்த அளவுக்கு யாரும் வியாபார வணிக பரிவர்த்தனைகளை பதித்து வைத்திருக்கவில்லை.
பாதுகாப்பற்ற சூழ்நிலை, களவு போக கூடிய வாய்ப்பு அதிகம் இருந்ததாலும் மேலும் வணிக பரப்பு என்பது ஒரு சிறு நிலபரப்புக்கு உட்பட்டு இயங்கி வந்ததால் அவற்றை ஆவண படுத்தி வைக்க யாரும் முயலவில்லை.
ராஜ்ஜியங்கள் என்பது ஒரு சிறு நிலபரப்பு அங்கு குறைவான மக்கள் அவர்களுக்கு ஒரு தலைவன் அவர்களை வழிகாட்ட ஒரு வயதான பெரியவர். இப்படியான அமைப்பு இருந்த வரைக்கும் பண பரிவர்த்தனை என்பது எதுவும் இல்லை அதற்கான தேவையும் இருந்ததில்லை.
தேவைகள் அதிகமான பொழுதோ அல்லது மக்கள் தொகை அதிகமான பொழுதோ பண பரிவர்த்தனைக்கான தேவை பிறந்து இருக்கலாம்.
ஒரு இன குழுவின் தலைவன் இன்னொரு அல்லது மற்ற நிலபரப்பை கைபற்றி இன குழு தலைவன் என்கிற நிலையில் இருந்து ஆட்சியாளன், அரசன் என்ற நிலைக்கு வளர்ந்த பொழுது எ அந்த நிலபகுதிகளை ஆள மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க அந்த அரசனுக்கு நிதி தேவை பட்டது.
அதனை எந்தெந்த வழிகளில் திரட்ட முடியுமென்று முயற்சித்த பொழுது தான் நிர்வாகம் பிறந்திருக்கும். நிர்வாகம் பல பொறுப்புகளை உருவாக்கி இருக்கும். பொறுப்புகளை கையாள தகுதியான ஆட்களை வேலை அமர்த்த வேண்டி இருக்கும்.
அப்படி ஆட்களை அமர்த்திய பிறகு அவர்கள் பார்த்த வேலைக்கு சம்பளம் கொடுக்க வேண்டி இருத்திருக்கும். எந்த அளவில் அவர்களது சம்பள தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் அப்படி நிர்ணயம் செய்த பிறகு அந்த தொகையை எப்படி கொடுக்க வேண்டுமென்று யோசித்த பொழுது தான் பண்டமாற்று சமூகமாக இருந்தது பணமாற்று சமூகமாக மாற்றி இருக்கும்.
அப்படி பணமாற்று மாற்றிய புள்ளியில் தான் இன்றைய நவீன உலகிற்கான அடித்தளம் அமைக்க பட்டு இருக்கும்.
அதெப்படி மாறி இருக்கும் ?
தொடரும்.