Home கவிதைகாலத்தின் ஆன்மா.

பேரன்பும் பெருங்கருணையும்
ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்து
பொங்கிப்பிரவாகித்து
கரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்
நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்
நினைவுகளெனில்
புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம்

வாழ்வெனும் காட்டாற்றின் நடுவே
சிறுதுண்டு நிலமாய்
காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்
மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்
நறுமணத்தால் பேதலித்து
காலடி நிலம் நழுவவும்
இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்
அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்
ஓங்கியொலித்து
இறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்
என நங்கூரமிட்டு
வரிசையாய் நிற்கின்றன நினைவுகள்
அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்
நட்சத்திரங்களைப்போல் மினுங்கியபடி

நினைவலைகளின் துணையுடன்
துடுப்பசைத்துத் திரிந்த நினைவுகள்
செலவிட மனதுவாரா உண்டியல் காசைப்போல்
கானல் நீருமாகி
எத்திசையிலோ உச்சுக்கொட்டிய பல்லிக்கு அஞ்சி
பேராழத்தில் அமிழ்ந்து கிடக்கின்றன
கரை திரும்பாமலும் எல்லை மீறாமலும்
காலத்தின் ஆன்மாவாய் நிலைத்தபடி.

Author

You may also like

Leave a Comment