கீழ்நிலை உயிரினம்

ஆயிரமாயிரம் ஆண்டு காலம் மடியும் உயிர்கள்
ஆழியின் ஆழ மடியில் சேரும்;
மண்ணும் சேறும் நீரும் மூட
மருளச் செய்யும் இருள் அங்கே சூழும்!

பூமித் தாயின் வெப்பம் கனன்று
புதைந்த உயிர்கள் கொள்கலனில் உருவம் மாறும்;
அழுத்தம் தந்து மேலும் இயற்கை சமைக்க
அடியில் உருவாகும் அமுதம் கருப்புத் தங்கம்!

காலம் என்னும் சிற்பி கடமையாய்ச்
செதுக்கியெடுக்க
பெருங்கடல் வியத்தகு கனிமச் சுரங்கமாகும்;
பாறை இடுக்கில் ஊற்றெடுத்துப் பெருகும் எண்ணெய்
பல்வகையில் மானுட வாழ்வு இயங்கிட உயிர்நாடியாகும்!

உருவாக ஓராயிரம் ஆண்டாகும் அதிசயப் பொக்கிஷம்
உன்னத இயற்கைச் சக்தியின் சீரிய உதாரணம்;
ஒரு நொடியில் அதனைச் சிதைக்கும்
மானுடம்
ஒன்றுக்கும் உதவாத
கீழ்நிலை மூட உயிரினமாகும்!

Author

  • கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

Related posts

வெயில் ஆடும் சுவர்

ஹனாசகா ஜிஜி – மொழியாக்கம்

தமிழே! அமிழ்தே! – 11