Home கவிதைநல்லாச்சி – 2

நல்லாச்சி – 2

1 comment
nallaachchi
This entry is part 2 of 20 in the series நல்லாச்சி

குப்பைகளைத் தரம்பிரிக்க
கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம் பள்ளியில்
மக்கும் குப்பை மக்காக் குப்பை என
உதட்டுக்குள்ளேயே அடிக்கடி
சொல்லிப்பார்த்துக்கொள்கிறாள் பேத்தி
வீட்டிலிருக்கும் பொருட்களையெல்லாம்
எதெது எவ்வகையென
மனசுக்குள்ளேயே குறிப்பெடுக்கிறாள்
இனி நான் ஒப்புதலளித்த பின்னரே
எவ்வொரு குப்பையும் வெளியேற வேண்டும்
புது விதியொன்றை வரைகிறாள்
வகைபிரித்துப் போடவென
தொட்டிகளையும் அடுக்கச்சொல்கிறாள்

பழத்தோலைத் தெரியாத்தனமாக
மாற்றிப்போட்ட தாத்தா
மாட்டிக்கொண்டு விழிக்கிறார் பரிதாபமாய்
ஒன்றிரண்டு தோப்புக்கரணங்களை
அபராதமாய் விதித்தபின்
பெரிய மனசுடன் மன்னிக்கிறாள் பேத்தி
வீடே குப்பையின் பின்னால் ஓடுகிறது
பேத்தியின் ரகளைக்கு நடுங்குகிறது
அவளின் அட்டகாசம்
சற்று அதிகமாகவே ஓங்குகிறது வீட்டில்
‘புதுமாடு குளுப்பாட்டுதா.. எல்லாஞ்சரியாப்போகும்
ரெண்டு நாளில்’ என்றபடி
நமட்டுச்சிரிப்புடன் நகர்கிறாள் நல்லாச்சி
குப்பையை உரமாக்குவதில்
பேத்தியின் ஆர்வத்தை
மடை மாற்றுகிறாள் மெல்ல மெல்ல

அடுத்த தெருவில் ஓர் பாட்டியை
திண்ணையில் ஒதுக்கிவிட்டார்கள் குப்பையைப்போல்
ஆற்றாமையுடன் அரற்றும் நல்லாச்சியை
துளைத்தெடுக்கிறாள் பேத்தி
ஒதுக்கப்பட்டவர்கள் எவ்வகை என
நினைவில் பிரகாசிப்போர் ஓர் வகையெனில்
இருக்கும்போதே மங்குபவர் இன்னொரு வகை
அவரவர் செயற்பாடுகளால்
அவரவரே நிர்ணயிக்கின்றனர்
எவ்வகையாயினும் புறக்கணித்தல் பாவம்
என்றாள் காலத்தால் கனிந்தவள்

குட்டிக்கைகள் கொள்ளுமட்டும் சுமந்து
எருக்குழி நிரப்பும் பேத்திக்கிரங்கி
இப்போதெல்லாம்
எண்ணியே இலையும் பூவும் உதிர்க்கின்றன
வேம்பும் மரமல்லியும்
என்கிறாள் நல்லாச்சி
ஆமாமென ஆமோதிக்கிறது
உதிராமல் தவமிருக்கும் பாலைப்பூ
பேத்தி கண்மலருமுன் சுத்தம் செய்துவிடும்
அன்னை மட்டும் முறைக்கிறாள்.

Series Navigation<< நல்லாச்சிநல்லாச்சி -3 >>

Author

You may also like

1 comment

சே.குமார் July 9, 2025 - 6:48 pm

சிறப்பு. வாழ்த்துகள்

Reply

Leave a Comment