நல்லாச்சி – 13

This entry is part 13 of 13 in the series நல்லாச்சி

திடலின் ஓரத்திலிருக்கும்
ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்
ஆவலும் பயமும் கொள்வாள் பேத்தி
கிளிகளைப்போன்ற அக்காக்களும்
அக்கக்கோவெனும் கிளிகளும்
இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்
ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலமாயிருந்த விழுதுகளில் சில
பாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தன
எண்ணெய் தடவாத முடிக்கற்றையென
நுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சில
அக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்க
விழுது பற்றி ஆடிய பேத்தி
அதே வீச்சில்
பூமியை முத்தமிட்டுப் புரண்டு
புழுதியை விபூதியெனப் பூசியெழுந்தாள்
கசிந்த குங்குமச்சொட்டுகளை ஒற்றியெடுத்தாள்

வாரியணைத்த நல்லாச்சி
சூனியக்கிழவிதான் இவ்வடிவெடுத்திருப்பதாயும்
‘வடக்கற்றையெலாம் அவளின் சடைக்கற்றை
அவ தலமுடியில தொங்குனா வலிக்கும்லா
அதாம் தள்ளியுட்டுட்டா’
என்றும் பயமூட்டுகிறாள்
உளுத்த மரத்திற்கொரு கதை சொன்னவள்
உயிர்மரத்துக்கும் ஒன்று வைத்திருப்பாள்
தள்ளிவிடாத மரமொன்று
தேவதையின் கூந்தலாய்க் கிளைத்திருக்கும்
எங்கேனும்.

Series Navigation<< நல்லாச்சி – 12

Author

Related posts

வறுமையும் விழாக் காலத் தனிமையும்

நூலகம்

அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்