தொண்ணூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமானியனுக்கு, தீபாவளி என்பது சொர்க்கத்தைக் காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவதுதான் மாவரைப்பதால் பண்டிகைகாலப் பலகாரங்களுக்கு இணையாக அப்போதெல்லாம் இட்லியும் இருந்தது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்த பின்னாலும் கலையாத, அரைகுறைத் தூக்கத்தோடு இலை முழுக்கப் பலகாரங்களைப்பரப்பி இட்லி சாப்பிட்டதை இன்று நினைத்தாலும் நாவெங்கும் சுவையாக இருக்கிறது. விதவிதமாய் எதைச் சாப்பிட்டாலும் இப்போதெல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
ட்ரவுசர் கலச்சாரம் முட்டிக்கு மேல் போய்விட்ட இன்றைய நாட்களில், கைலிகளெலாம் வாஷ்டு லுங்கிகளாகி விட்டன. அப்போது இப்படியில்லை. புதிதாய் வாங்கிய கைலியில் மொடமொடப்பு குறையவே ஓரிரு வாரங்களாகும். புதுக் கைலியை மூட்டுவதற்கும் டைலரின் தேவையிருந்தது. ரெடிமேட் ஜவுளிகள் பரவலாக்கப்படாத அன்றைய காலங்களில், மீட்டர் கணக்கில் எடுத்துக் கொடுத்து, முதல்நாள் நள்ளிரவு வரை தையற்கடை வாசலில் தவமாய் காத்திருக்க வேண்டிருக்கும். கால் கடுக்க நின்றாலும், அடித்து விரட்டாத குறையாக டைலர் கடையை விட்டுப் போகச்சொல்லிப் பார்ப்பார்கள்.
ஒருவழியாய் பட்டன் கட்டி, அயர்னிங் செய்த பின்னால், கெஞ்சிக் கூத்தாடி அரைகுறையாய் அவசரகதியில் தைத்த புதிய சட்டையை வாங்கி முகர்ந்து பார்க்கும் போது வரும் வாசனைக்கு இணையாக எந்தப் போதையுமில்லை. மஞ்சள் வைத்த காலரோரத்தை தூக்கி விட்டு ஊசி வெடி, லெட்சுமி வெடியென சரம் சரமாய் வெடித்தாலும், வெறும் மத்தாப்பு துளிகள் பட்டு ஓட்டை விழுந்த புதுச்சட்டைக்காக முதுகில் விழுந்த அடிகள் இன்றைக்கும் நினைவில் இருக்கின்றன. அந்த அடியை விட சட்டை ஓட்டையானதுதான் பெரும்வலியாக இருக்கும். இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் எடுத்த பிராண்டட் புதுச்சட்டையை உடனே போட பெரிதாய் எவ்வித ஆர்வமும் மனதிற்கில்லை, கைலியும் பனியனுமே போதுமானதாக இருக்கிறது.
வெடிக்கடையில் ஐநூறு ரூபாய்க்கு வெடி வாங்கினாலே பெரிய விசயமாக இருந்தது. அதைச் சரி பங்காக ஆளாளுக்குப் பிரித்து, காய வைத்து ஒவ்வொரு வெடியாய் ஒரு வாரம் முழுக்க வெடித்ததெல்லாம் இன்னமும் பசுமையாய் இருக்கிறது. ஒரு வாரமாகப் போட்டி போட்டு வெடித்த குப்பைகளைக் கூட அம்மாவைக் கூட்டி அள்ள விடாமல், தீபாவளிக்கு அடுத்த நாளெங்கும் தெருத்தெருவாய் ஊர்சுற்றி வலம் வரும் போது எவ்வளவு வெடித்தாள்கள் நம் வீட்டு வாசலில், சிதறிக்கிடக்கின்றன என்பதை ஒப்பீட்டு சக தோழமைகளுடன் பெருமை பீற்றிக்கொண்ட காலமது. இப்போதெல்லாம் நேரடியாக சிவகாசியிலிருந்து ஆன்லைனில் ஆர்டர் போட்ட பத்தாயிரம் ரூபாய் வெடியில் ஒரு திரியைக் கூடப் பற்றவைக்க துளி கூட விருப்பம் இருப்பதில்லை.
தமிழ்ராக்கர்ஸ், மூவீஸ்டா இல்லாத அன்றைய தீபாவளி நாட்களில் புதிதாய் வந்திருக்கும் திரைப்படத்தைக் காண தியேட்டரெங்கும் அலைமோதும் கூட்டங்கள் பெருமளவில் இப்போதில்லை. இன்னும் சொல்வதென்றால் ஊரே கொண்டாடிய தியேட்டர்களும் இப்போதில்லை. மூவி ரிவியூவர்ஸ்களின் எண்ணிக்கை அளவுக்குக் கூட சிறுநகரங்களில் தியேட்டர்கள் இல்லை.
அப்போதெல்லாம் திருப்பூர், சென்னையென வெளியூர் வேலைக்குச் சென்றவரெல்லாம் அடையாளந் தெரியாதளவுக்கு ஆளே கொஞ்சம் மாறியிருப்பதால் பண்டிகை நாட்களில் ஊரெங்கும் கண்ணில் தென்படும் பலரை, சட்டென எனக்கு தெரியாமல் போனது வியப்பாகத்தான் இருந்தது. பல வருடங்களாக அந்த ஊர் பக்கமே செல்லாததால் என்னை யாருக்கும் இப்போது தெரியாதென்பதில் கொஞ்சம் கூட எனக்கு வியப்பேதுமில்லை. ஓடி விளையாடிய பால்ய நினைவுகள் முழுவதும் நிரம்பியிருந்த அந்தக் கூரை வீட்டையும் விற்ற பிறகு, எங்கள் வீடிருந்த இடத்தில் புதியதொரு மாடி வீடு இருந்தால் அதைப் பார்த்துப் பூரித்து போகவா முடியும்? எங்களுக்கென வீடு இருந்ததை நினைத்து, வீடு இழந்ததை நினைத்து, இப்படியாகப் பலவற்றை நினைத்துப் பூரித்து போகவா முடியும்? என்பது வேறு கதை.
அன்றைய நாட்கள் போல கடைசி நொடியில் பணம் புரட்டி தீபாவளி விடிந்தும், கெளரவத்திற்காக மச்சான் வீட்டில் வரிசை வைத்துக் கொண்டிருக்கும் அண்ணன், தம்பிகளை இன்று காண முடியவில்லை. ஜி பே, ஃபோன் பே என பேமண்ட் ஆப்ஸ்களே தபால்காரர்களாக மாறிவிட்ட பின்னால் மிச்ச சொச்சமிருந்த மணி ஆர்டர் அனுப்பும் பழக்கமும் மலையேறிப் போய்விட்டன. இன்னும் சொல்வதென்றால், அத்திப்பட்டி போல பல கிராமங்களே காணாமல் போய்விட்டன. மிச்சமிருப்பவைகளும் பழைய கொண்டாட்டங்களின்றி சொந்த பந்த உறவுகளின்றி சிறு சிறு நகரங்களாகச் சிதறிக்கிடக்கின்றன; பகைதான் மிச்சமென வைத்திருக்கும் புதுப்பணக்காரர்களாக உருவெடுத்த பல குடும்பங்களில் உறவாடவும் நேரமில்லை. ஹாலிடே ட்ரிப் என ஊர்சுற்றவும் நேரமில்லை. ஆக, தீபாவளி என்பதும் ஒரு விடுமுறை நாளே ஒழிய, பெரிதாய்க் கொண்டாட யாருக்கும் ஏதுமில்லை.
ஏனெனில், அன்றைய தீபாவளி போல் இன்றில்லை!