Home கவிதைநல்லாச்சி -9
This entry is part 9 of 14 in the series நல்லாச்சி

வயலில் நடக்கும் அறுவடையை
மேற்பார்வையிடவென
தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும்
கேள்விகளும் பதில்களுமாய்
வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும்
அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது
சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு

அடிவயிற்றிலிருந்து ஓங்காரமிட்டுக்கொண்டிருந்த
அந்த இயந்திரம்
பயிரைத்தின்று விட்டு
நெல்மணிகளையும் வைக்கோலையும்
தனித்தனியாய்த்துப்பியது பேராச்சரியம் அவளுக்கு
‘மாடு, யானைகளைக்கட்டிப் போரடிப்பார்களாமே
போரடித்தலென்றால் என்ன”
ஆதியோடந்தமாய் அவளுக்கு விளக்கிய நல்லாச்சி
மேலுமொரு தகவலையும் பரிமாறுகிறாள்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் சொல்
இதிலிருந்துதான் பிறந்ததென
‘சண்டு விடுதல்ன்னு கிராமத்தில் சொல்லுவோம்’
தனக்குள் முணுமுணுத்துக்கொள்கிறாள்
அக்கால நினைவுகளில் அமிழ்ந்தபடி

காற்றில்லா காலங்களில் முறங்களும்
நாகரீகம் பெருத்தபின் மின்விசிறிகளுமாய்
நான்கு பேர்களின் வேலையை ஒருவர் செய்வதென
மனித உழைப்பைப் படிப்படியாக
இயந்திரம் விழுங்கியதை
பேத்திக்குச் சொல்லிப் பெருமூச்செறிகிறாள்
தற்போது இவ்வியந்திரம்
எத்தனை வாழ்வாதாரங்களைக்
காவு கொண்டிருக்கிறதோ வினவுகிறாள் பேத்தி
நாற்பதோ நானூறோ
விவசாயியின் சத்துக்குட்பட்டது அக்கணக்கு
எடக்குப்பேச்சும் தெம்மாங்குமாய்
மணத்துக்கிடந்த களத்து மேட்டில்
ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது இயந்திரம்
நெல்மணிகளைத் தின்னவரும் குருவிகளை விரட்டியபடி.

Series Navigation<< நல்லாச்சி -7நல்லாச்சி – 11 >>

Author

You may also like

Leave a Comment