நல்லாச்சி – 17

This entry is part 17 of 37 in the series நல்லாச்சி

வாழும் பல்லியும் மனைப்பாம்பும்
அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்
அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியை
பெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்
மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்
சற்றும் பயந்ததில்லை அவள்

கண்ணைக்குத்துவதாய்ச்
சொல்லப்படும் சாமியிடமும்
தூக்கிச்சென்றுவிடுவதாய்
நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்
ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயென
பரிதாபமேயுண்டு அவளுக்கு
தேனீக்குப் பயப்படாத மாமன்
குளவிக்கு அஞ்சும் விந்தையும்
முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சி
மருமகளிடம் காட்டும் பணிவும்
என்றுமே புரிந்ததில்லை அவளுக்கு

ஆளைவிழுங்கும் சுறாமீனொன்றை
ஆங்கிலப்படமொன்றில் கண்ட நாள்முதல்
அத்தனை தைரியத்தையும் மறக்கிறாள்
எந்தக்குழாயின் வழி எத்தனை சுறா வருமோவென
அண்ணன் போடும் தூபத்தால்
அடுக்களை செல்லவும் மறுக்கிறாள்
சாமதானபேதங்களை பேத்தியிடமும்
தண்டத்தை அண்ணனிடமும் பிரயோகித்தபின்
நிலைமையைச் சீரமைக்க முற்படுகிறாள் நல்லாச்சி
ஆதியிலிருந்து ஊட்டி வளர்த்ததெல்லாம்
பாதியில் கரைந்து போனாலும்
எல்லாப்பூச்சையும் அழித்துவிட்டு
மறுபடியும் ஆரம்பித்திருக்கும்
அந்த ஓவியம் செவ்வனே நிறைவுறுவதாக.

Series Navigation<< நல்லாச்சி – 16நல்லாச்சி – 18 >>

Author

Related posts

உலகின் பெருவிழா – கால்பந்துப் போட்டி

உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி

எண்ட் டோஹ் த்ரெ – 3