Home தொடர்தமிழே அமிழ்தே – 10.

தமிழே அமிழ்தே – 10.

0 comments
This entry is part 10 of 10 in the series தமிழே அமிழ்தே

குற்றியலுகரம் என்றால் குறுகிய உகரம்.

விடு, வீடு, மாடு என்று உகரத்தில் முடியும் சொற்களை உச்சரித்துப் பாருங்கள். கடைசி எழுத்து மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பதை உணரலாம். அதனால் அவை குற்றியலுகரம் எனப்படும்.

தமிழாசிரியர் பணிக்காக ஓர் அறிஞர் நேர் காணலுக்குச் சென்றிருந்தாராம். அவரிடம் வன்தொடர்க் குற்றியலுகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் ஆகியவற்றுக்கு ஒவ்வோர் எடுத்துக்காட்டினைத் தருமாறு வினா விடுக்கப்பட, அவரோ “எனக்குத் தெரியாது” என்றாராம். அதன் பிறகும் அப்பணி அவருக்கே வழங்கப்பட்டதாம். காரணம், அவர் சொன்னது சரியான விடை என்பதால்தான். ஆம், அவர் சொன்னதில் எனக்கு என்பது வன்தொடர்க் குற்றியலுகரம். தெரியாது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

குற்றியலுகரம் ஆறு வகை
1). வன்தொடர்க் குற்றிய லுகரம்.
2).மென்தொடர்க் குற்றியலுகரம்.
3). இடைத்தொடர்க் குற்றியலுகரம்.
4). ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்.
5).உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்.
6). நெடிற்றொடர்க் குற்றியலுகரம்.

கடைசி எழுத்து கு சு டு து பு று என்ற எழுத்தில் முடிவது குற்றியலுகரம் ஆகும்.

அதில் கடைசி எழுத்துக்கு முந்தைய எழுத்து க் ச் ட் த் ப் ற் என்று வல்லின மெய்யாக அமைந்தால் அது வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

விளக்கு, அச்சு, பாராட்டு, வித்து, திறப்பு, காற்று

மென்தொடர்க் குற்றியலுகரத்தில் கடைசி எழுத்திற்கு முந்தைய எழுத்து மெல்லினமாக அமையும்.

குரங்கு, மஞ்சு, வாண்டு, மருந்து, கரும்பு, இன்று.

கடைசி எழுத்துக்கு முந்தைய எழுத்து ய் ர் ல் வ் ழ் ள் என்று இடையின மெய்யாக அமைந்தால் அது இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

எய்து, சார்பு, சால்பு, போழ்து

கடைசி எழுத்துக்கு முந்தைய எழுத்து ஃ என்று வந்து முடியும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

அஃது, அஃகு பஃது

இரண்டு எழுத்துக்கும் மேற்பட்ட சொற்களில் கடைசி எழுத்துக்கு முந்தைய எழுத்து உயிரெழுத்தாக அமைவது உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். சான்றாக

தரகு, சிறகு
இவற்றில் கு-வுக்கு முந்தைய எழுத்து ர ற எனினும் அவற்றை ர்+அ, ற்+அ என்று எடுத்துக் கொண்டு உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் என்று ஆகும்.

பயறு, அழகு, மரபு, சிறகு, படகு, வரகு

ஆறாவதாக, நெடிற்றொடர்க் குற்றியலுகரம் என்பதன் எடுத்துக்காட்டுகள்

ஆகு, காசு, பாடு, காது, சேறு, என்பன

அடுத்து, இந்த வல்லின உகரங்கள் கு சு டு து பு று என்பன பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்தால் தான் அவை குற்றியலுகரம் எனப்படும். வினைச்சொல்லின் கடைசியில் வந்தால் முற்றியலுகரம் எனப்படும்.

சொல்லு, சுருக்கு
நடத்து, படுத்து, கலக்கு,

(தொடர்வோம் )

Series Navigation<< தமிழே! அமிழ்தே! – 9

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

You may also like

Leave a Comment