முதலில் கடலின் வழக்கிற்கேற்றாற்போல்
மூலங்கள் தோன்றின
அம்மூலங்களுக்குத் தேவையான காரணங்கள்
பலவாய்க் கிடைத்தன
அப்போது அது கடலெனக் கொள்ளப்படவில்லை
அந்தக் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தன
பேதங்கள் அலையடிக்கத் தொடங்கின
சில நுரைத்துப் பொங்கின
காரணங்களால் காரணங்கள் நிறையத் தோன்றின
அதோடு மூலங்கள் தோன்றின
அப்போதும் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தன
காரணங்களுக்கு ஆலோசனை வழங்க முன்வந்தது வழக்கு
வழக்குகள் அடியாழத்தில் அடங்கிக் கிடந்து
இயக்கிக்கொண்டிருந்தன அனைத்தையும்
பலவாறாய்ப் பேசத் தொடங்கி
ஓய்ந்தபோது முடிவில் கடலெனக் கொள்ளப்பட்டது.
Author
-
மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.