பொழுது விடியும் முன்பே
அவர்கள் புறப்பட்டனர்.
அவர்களது வலைகள்
நம்பிக்கையால் கனத்திருந்தன.
அமைதியாக இருந்தது
அடிவானம்.
நீல நிறத்தைப் பரப்ப
ஆயத்தமாகிக் கொண்டிருந்தது
ஆகாயம்.
அவர்களது தோலில்
நினைவுகளைப் போல்
ஒட்டிக் கொண்டிருந்தது உப்பு.
எழும் ஒவ்வொரு அலையும்
அவர்கள் வாழ்நாளெல்லாம் அறிந்த
ஒரு மூச்சினைப் போல் உயர்ந்தது.
எண்ணும் முன்பே
மேகங்கள் திரள்கின்றன.
ஒரு கனத்த மௌனம்
பிறகொரு பலத்த முழக்கம்.
அவர்களுக்காகவே
பாடிக் கொண்டிருந்த கடல்
காரணமின்றி
ரெளத்திரம் கொள்கிறது.
திடீர் காற்றில்
சலசலக்கும் இலைகளைப் போல்
தத்தளிக்கின்றன படகுகள்.
தனது எச்சரிக்கைகளை
வாசிக்கிறது இடி.
சுருக்கமான கதைகளை எழுதி விட்டு
மழையோடு மறைகிறது மின்னல்.
சுழன்றாடி ஓய்கிறது புயல்.
அவர்கள் படகுகளை வளைத்து
அலைகளைக் கடந்து
வெற்றுக் கைகளுடன்
வீடு திரும்புகின்றனர்
உறங்காத கடலின் உறுதியைக்
கண்களில் தாங்கி.
மீண்டும் புலர்காலையில்
நின்றிருந்தனர் கரையில்
வலைகளைப் பழுது பார்க்க
கடலின் மனதைப் படிக்க.
1 comment
அருமையான கதை படித்து ரசித்தேன்