Home சிறப்பிதழ்கள்மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026மருத்துவர் பக்கம் – 24: இது “சின்னம்மை” காலம் 

மருத்துவர் பக்கம் – 24: இது “சின்னம்மை” காலம் 

by Farooq Abdullah
0 comments

சின்னம்மை எனும் சிக்கன்பாக்ஸ் வேனிற்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் தொற்றாகும். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பள்ளிப் பருவத்தில் உள்ள சிறார் சிறுமியருக்கும் இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். ஒருமுறை தொற்று கண்டவர்களுக்குப் பெரும்பாலும் மீண்டும் தொற்று ஏற்படுவதில்லை.

இதற்குக் காரணம் – முதல் தொற்றின் மூலம் பெறப்படும் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியானது மீண்டும் அதே நபருக்குச் சின்னம்மை வராமல் தடுக்கிறது. எனினும், குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு முதல் முறை குழந்தைப் பருவத்தில் சின்னம்மை வந்திருந்தாலும் மீண்டும் வளர் இளம் பருவத்தில் கல்லூரி காலத்தில் ஏற்படலாம். இன்னும் வயது முதிர்ந்தோருக்கும் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் பெரும்பாலும் அச்சுறுத்தல் தராத சாதாரண நோயாகக் கடந்து செல்லும். எனினும்:

  • ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள்
  • எடை குறைவான / ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள்
  • எதிர்ப்புச் சக்தி குன்றியோர்
  • முதியோர்

ஆகியோருக்குச் சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம். இதர வைரஸ் காய்ச்சல்கள் போல முதல் இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சலுடன் ஆரம்பிக்கும். பின் நெஞ்சுப் பகுதி, முதுகுப்பகுதி, முகம் எனத் தொடங்கி உடலின் அனைத்துப் பகுதியிலும் கொப்புளம் தோன்றும்.

இந்தக் கொப்புளம் பார்ப்பதற்குப் பட்டாணிப் பயறு (CHICKPEAS) போல இருந்தமையால் ஆங்கிலேயர் சிக்கன்பாக்ஸ் என்று பெயர் வழங்கினர். இந்த நோய்க்கும் சிக்கனுக்கும் (பிராய்லர் / நாட்டுக்கோழி) துளித் தொடர்பும் இல்லை… இல்லை… இல்லை… தமிழில் இதற்குச் சின்னம்மை என்று பெயர் வைத்துள்ளோம். காரணம் இதை விடக் கொடூரமான பெரியம்மை என்ற தொற்று 1970-களின் இறுதி வரை நமது உலகில் இருந்து வந்தது. பலருக்கும் மரணத்தையும், உயிர் பிழைத்தோர்க்கு ஆறாத வடுக்களையும் பரிசாக வழங்கிய கொடூர நோய் அது.

பெரியம்மை வைரஸிற்கு எதிராகச் செயல்படும் தடுப்பூசியைக் கொண்டு அந்த நோயை விரட்டியடித்தோம். சின்னம்மைக்கு எதிராகவும் தடுப்பூசி உள்ளது. ஆயினும் இது பெரியம்மை போலக் கொடூரமானது இல்லை என்பதாலும், மரண விகிதம் மிகவும் குறைவு என்பதாலும் இந்தத் தடுப்பூசி எதிர்ப்புச் சக்தி குன்றியோருக்கு மட்டும் அவர் விருப்பத்தின் பேரில் செலுத்தப்படுகிறது.

கொப்புளம் அனைத்தும் அடுத்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் சருகாகி விழுந்துவிடும். கொப்புளங்கள் தோன்றத் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிச் சருகாகுவது வரை தொற்று கண்டவரிடம் இுந்து மற்றொருவருக்குப் பரவும். தொற்று கண்டவர் இருமும்போதும் தும்மும்போதும் தொற்று கண்டவருடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பவருக்கும் பரவும். எனவே இந்தத் தொற்று கண்டவர்களை நோய் பரவும் காலம் மட்டும் தனிமையில் (ISOLATION) வைக்க வேண்டும். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை இரண்டு வாரமேனும் தனிமைப்படுத்திக் (QUARANTINE) கொள்ள வேண்டும்.

என்னதான் சாதாரண தொற்று என்று கூறினாலும் குழந்தைகளுக்கும் எதிர்ப்புச் சக்தி குன்றியோருக்கும் முதியோருக்கும் இந்த நோய் நிலை ஏற்படும்போது குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு:

  • தீவிர நுரையீரல் தொற்று (நியூமோனியா)
  • தீவிர கிருமித் தொற்று நிலை
  • தீவிர மூளைத் தொற்று

போன்ற தீங்குகளை ஏற்படுத்தி வெகு சிலருக்கு மரணம் வரை கொண்டுய்க்கும் தன்மை கொண்டது. இந்தத் தொற்றுக்கு எந்த மருத்துவச் சிகிச்சையும் தேவையில்லை என்ற கூற்று வைக்கப்படுகிறது. ஆனால் இந்த நோய் தரும் ஆபத்தான தீங்குகளை விட்டும் காத்திட முறையான மருத்துவச் சிகிச்சை வழங்குவதே சிறந்தது.

இன்னும் முதல் முறை தொற்று ஏற்பட்டவர்களுள் 30% பேருக்கு இந்தச் சின்னம்மை தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் அவர்களது உணர்ச்சிக்கான நரம்பு மண்டலத்தில் அமைதியாக வருடங்கள் துயில் கொண்டிருக்கும். அவர் வாழ்க்கையில் பல வருடங்களுக்குப் பிறகு எதிர்ப்புச் சக்தி குறைபாடு நிலை ஏற்படும்போது திடீரெனக் கண்விழித்துக்கொண்டு மீண்டும் நோய் நிலையை உருவாக்கும் தன்மை கொண்டது இந்த வைரஸ்.

எனவே சின்னம்மை வந்தால் மருத்துவரை அணுகி இதற்கென உள்ள வைரஸ் கொல்லி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இதன் மூலம்:

  • விரைவாக அறிகுறிகள் நீங்கும்.
  • நியூமோனியா / மூளைத் தொற்று போன்ற தீங்குகள் நேராமல் இருக்கும்.
  • கூடவே பின்னாளில் மீண்டும் தொற்று ஏற்படாத நிலையையும் உறுதி செய்யலாம்.
  • தொற்றுக்குச் சிகிச்சை எடுக்கும் ஒருவரிடம் இருந்து அவரது குடும்பத்தினருக்குப் பரவும் வாய்ப்பும் குறையும்.

சின்னம்மையில் ஏற்படும் கொப்புளங்கள் தானாகக் குணமடையக் கூடியவை. எனவே அதன் மீது கிருமிநாசினிகள் பூசத் தேவையில்லை. இந்தக் கொப்புளங்கள் பெரும்பாலும் தழும்பாக மாறாது. எனவே கவலை வேண்டாம். அரிப்பு அதிகமாக ஏற்படும் என்பதால் மருத்துவர் பரிந்துரையுடன் அரிப்புக்கு லோஷன் பூசலாம். நல்ல காற்றோட்டத்துடன் கூடிய அறையில் ஓய்வு எடுத்துச் சருகு நிலை அடைந்தவுடன் குளிக்கத் துவங்கலாம்; அலுவல் மற்றும் பள்ளிக்குத் திரும்பலாம்.

Author

You may also like

Leave a Comment