நல்லாச்சி – 25

This entry is part 25 of 36 in the series நல்லாச்சி

நாளும் நாலு நல்லதை
நடைப்பயிற்சியின்போது அலசுவது
நல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்
தகவல்கள் பரிமாறுவதுபோலவே
அறிவுரைகளும் பரிமாறப்படும்
பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி

வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்
அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்
நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரை
பிழிந்து அலசியபின்
பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்று
மனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென

அகந்தையும் தன்முனைப்பும்
பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்
காரணங்களென்கிறாள் நல்லாச்சி
துளிக்குள் பிறந்தழியும்
மாந்தர் அறியாரோ
துளிக்குள் துளியே தாமென்று
அகந்தை அமர்ந்த அறிவும்
மதயானை புகுந்த மல்லித்தோட்டமும்
பிழைக்குமோ!! தழைக்குமோ!!
கேள்விகளின் பாதையில்
சென்றுகொண்டேயிருக்கிறாள் பேத்தி
நின்று கொண்டேயிருக்கிறாள் நல்லாச்சி
யுகயுகமாய்..

Series Navigation<< நல்லாச்சி – 24நல்லாச்சி – 26 >>

Author

Related posts

ஹபீபி – நேசத்தின் மொழி தெரிந்தவன்

சிறகுகள் தீண்டிய உலகம்

தான வீர சூர கர்ணன் – 2