மாபெரும் தப்பிப்பு – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

“கேள்”, என்றான் அவன்,
“ஒரு வாளிக்குள் நண்டுகள் கொத்தாக இருப்பதை
எப்போதேனும் பார்த்திருக்கிறாயா?”
“இல்லை,” என்றேன் நான்.

“சரி. அங்கு என்ன நடக்குமெனில்
அவ்வப்போது ஒரு நண்டு
மற்ற நண்டுகளின் மேல் ஏறி
வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும்.
அது தப்பித்து வெளியேறப் போகும் தருணத்தில்
இன்னொரு நண்டு அதைப் பிடித்து
கீழே இழுத்துவிடும்.”

“உண்மையாகவா?” என்று கேட்டேன்.
“உண்மையாகத்தான்,” என்றான் அவன்.
“இந்த வேலைவும் அப்படியேதான்.
இங்கிருந்து யாராவது வெளியேறுவதை
மற்றவர்கள் விரும்புவதில்லை.
இதுதான் இந்த அஞ்சல் துறையின் நிலைமை!”

“நான் உன்னை நம்புகிறேன்”, என்றேன்.
சரியாக அந்த நேரத்தில் வந்த மேற்பார்வையாளர்
“நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தீர்கள்.
இந்த வேலையில் பேச அனுமதி இல்லை,” என்றார்.

அங்கே நான் பதினொன்றரை ஆண்டுகள் இருந்தேன்.

நான் என் இருக்கையிலிருந்து எழுந்து
நேராக அந்த மேற்பார்வையாளரின் மேல் ஏறி
பிறகு கைகளை நீட்டி
என்னையே மேலே இழுத்துக் கொண்டு
வெளியே வந்துவிட்டேன்.
அது நம்ப முடியாத அளவுக்கு
மிக எளிதாக இருந்தது.
ஆனால் மற்றவர்கள் யாரும்
என்னைப் பின்தொடரவில்லை.

அதன் பிறகு எப்போதெல்லாம் நான்
நண்டு கால்களைச் சாப்பிட்டேனோ
அந்த இடம் நினைவுக்கு வந்தது.
ஒருவேளை ஐந்து அல்லது ஆறு முறை
அந்த இடத்தைப் பற்றி நினைத்திருப்பேன்…
கல்லிறாலுக்கு மாறும் முன்பு.
*

மூலம்: The Great Escape By Charles Bukowski
தமிழாக்கம்
: ராமலக்ஷ்மி
*

 சார்லஸ் புக்கோவ்ஸ்கி  (1920 – 1994):

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், ஆறு நாவல்கள் ஆகிய யாவும் சுமார் அறுபதுக்கும் மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன.

Series Navigation<< இந்த விஷயங்கள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

Author

  • ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்

காவூ – ராமசந்திரன் உஷா( புத்தக மதிப்புரை)

மருத்துவர் பக்கம் – 36: பல வண்ண அபாய அப்பளம்