Home கட்டுரைநவீன உலகின் தனிமை நெருக்கடி

நவீன உலகின் தனிமை நெருக்கடி

by Padma Arvind
0 comments

1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். முதல் நிமிடமே $2.25 எனக் கட்டணம் மிக அதிகம். இப்போது போல இலவசமாக கூப்பிட இயலாது. ஆனால், இப்போது அப்படியில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் குளிர்காலங்களில் பொதுவாகவே ஒருவித மன அழுத்தம் வந்து சேரும். அதிலும் தொற்றுநோய்க் காலங்களில் மனிதர்களைக் காணாமல், பழகாமல் ஒரு ஏக்கம் பரவலாக வந்திருந்ததை உணர முடிந்தது. தனிமை, மன அழுத்ததை, மனச்சோர்வை அதிகம் உண்டுசெய்கிறது. இதனால் இளம் வயதினர் முதல் முதியவர் வரை தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார்கள்.

இயல்பாகவே மனிதன் கூடிவாழும் விலங்கினத்தைச் சேர்ந்தவன். அதனால்தான் குடும்ப அமைப்புகள், சமுதாய அமைப்புகள் எல்லாமே உருவாகின. இன்றும் அவை எல்லாம் இருந்தும், உணர்வு ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட மக்களே அதிகம்.

தனிமை உணர்வு மிகக் கொடூரமானது. மிகக் கொடூரமான குற்றங்களுக்கு தனிமைச் சிறைகள் உச்சக்கட்ட தண்டனையாக வழங்கப்பட்டன. அப்படி இருக்கும் போது சாதாரண நடைமுறை வாழ்க்கையில் நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வது எத்தனை அபாயகரமானது?

அமெரிக்காவில் மட்டும் இன்றி உலக அளவில் கூட இன்று பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை  தனித்திருப்பது அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வகுப்பறைகளில் குழந்தைகள் ஒருவருக்கொருவர் பேசி, விளையாடிப் பழகினார்கள். இப்போதோ 10 வயதுக் குழந்தைகள்கூட தங்கள் திறன்பேசிகளில் ஏதேனும் காணொளிகளைக் கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்,” என்று பலரும் சமீபத்தில் நடந்து முடிந்த ‘இளம் வயதினரின் தனிமை: காரணங்களும் தீர்வுகளும்’ என்ற சர்வதேச மாநாட்டில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தார்கள்.

அமெரிக்காவில் பல தரப்பட்ட மக்களிடையே தனிமை உணர்வைப் பரவலாகக் காண முடிகிறது. பள்ளி முதல் முதியோர் காப்பகம் வரை. அலுவலகங்களில் கூட மனம் விட்டுப் பேச பலவிதத் தடைகள் இருக்கின்றன.

குழந்தைகள் நேரடி உரையாடல்களில் ஈடுபடுவதில் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களில் பலர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் மூழ்கியிருப்பதால், முகத்துக்கு முகம் பார்த்து உரையாடும் திறன்களை இழந்துவருகின்றனர்.

மெட்டா (முன்னாள் பேஸ்புக்) போன்ற நிறுவனங்கள் ‘மக்களை இணைப்பதாக’ வாதிட்டாலும், பலருடைய சமூக ஆய்வுகள் நேர்மாறான உண்மையைக் காட்டுகின்றன. உண்மையில் மெட்டா போன்ற தளங்கள் மக்களை இணைப்பது போலச் சொல்லிக்கொண்டாலும் ஒரே வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியமான உரையாடல் நேரத்தையே கூட குறைத்தது. குடும்ப உறுப்பினர்களைக் கூட அந்நியர்களாக்கி வருகின்றது.

அமெரிக்காவில் 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 78% பேர் சமூக ஊடகங்களில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாகச் செலவிடுகின்றனர். இது நேரடி உரையாடல்களையும், சமூகத் தொடர்புகளையும் கணிசமாகக் குறைத்துள்ளது.

பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் ஒரே குடும்பத்தினர்கூட ஒருவருக்கொருவர் பேசுவதற்குப் பதிலாக வாட்ஸ்அப் அல்லது மெசஞ்சரில் தகவல் அனுப்புகிறார்கள். வீட்டில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் இருந்தாலும், அவரவர் சமூக ஊடகப் பக்கங்களில் மூழ்கியிருக்கின்றனர். உணவு நேரங்களில்கூட, ஒவ்வொருவரும் தங்கள் மொபைல்களில் ஸ்க்ரோல் செய்வதை நீங்களே கூட பல குடும்பங்களில் கவனித்திருக்கலாம்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில், 57% மக்கள் தனிமையில் தவிப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. பதின்ம வயதில் இருப்பவர்களில் பலர் தனிமையில் இருப்பதாகக் கருத்துக் கூறியிருந்தார்கள்.

நியூ ஜெர்சியில் வசிக்கும் 17 வயது உயர்நிலைப்பள்ளி மாணவி ஏஞ்சலா ரோட்ரிகஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் அனுபவத்தைப் பகிர்ந்தார்: “எனக்கு ஆயிரக்கணக்கான இணையவழித் தொடர்பாளர்கள் இருந்தாலும், பள்ளியில் என்னுடன் உண்மையாகப் பேசுபவர்கள் மிகச் சிலரே. கடந்த ஆண்டு, மன அழுத்தத்தால் நான் பல வகுப்புகளைத் தவறவிட்டேன். என் பெற்றோர்களுக்குக்கூட என் பிரச்சனையைப் புரிய வைக்க முடியவில்லை. ‘உன்னிடம் இத்தனை நண்பர்கள் இருக்கிறார்களே’ என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள், ஆனால் டிஜிட்டல் நண்பர்கள் உண்மையான ஆதரவை வழங்குவதில்லை.”

அமெரிக்கா போன்ற நாடுகளில் பள்ளிகளில் அல்லது சமுதாயத்தில் உள்ள லிட்டில் லீக்ஸ் போன்றவற்றில் கால்பந்து கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளும், பனிக்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுகளும் விளையாடுவது இன்னும் பிரபலமாக இருக்கிறது. ஆனாலும் நடுத்தர வயது மக்களில் பலர், உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஆர்வமின்றி செல்பேசிகளில் இணையவழி விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். முதியோர்கள், இணையவழியில் சூதாட்டத்திற்கும் மெல்ல அடிமையாகிறார்கள்.

ஆரம்பத்தில் தனிமை இனிமையாக இருந்த போதும், மன அழுத்தம், அதிகப்படியான மனப் பளு எனப் பல விதச் சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறது. இதனால் அமெரிக்காவில் மட்டும், $6.7 பில்லியன் டாலர்கள் மருத்துவக்காப்பீடு, மெடிக்கேர் ஆகியவற்றால் செலவழிக்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களோ பணியாளர்கள் மன அழுத்தம் காரணமாகப் பணிக்கு வராமல் இருத்தல், வேலையில் கவனமாகச் செயல் பட முடியாதது போன்ற காரணங்களால் $154 பில்லியன் நட்டமடைந்திருக்கிறது.

15 ஆண்டுகளாக அமெரிக்காவில் குடும்ப மன நல ஆலோசகராகப் பணியாற்றும் டாக்டர் வாசுதேவ் மக்கீஜா தன் அனுபவத்தில் “மின்னிலக்கச் சாதனங்கள் குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, அவர்களை மேலும் பிரித்துள்ளன என்று கூறுகிறார்.. ஒரே வீட்டில் வசிக்கும் பெற்றோரும் பிள்ளைகளும் உடல் ரீதியாக அருகருகே இருந்தாலும், உணர்வு ரீதியாக மிகத் தொலைவில் இருக்கிறார்கள். குடும்ப உணவு நேரங்களில்கூட, ஒவ்வொருவரும் தங்கள் கைப்பேசிகளில் ஸ்க்ரோல் செய்வதை அமெரிக்கக் குடும்பங்களில் பரவலாகக் காணமுடியும். இதனால் நல்ல ஆரோக்கியமான உரையாடல்கள் நிகழ்வதில்லை. கருத்துப் பரிமாற்றமும் தகவல் பரிமாற்றங்களும் நடைபெறுவதில்லை.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, தனிமையில் உள்ள இளையோரில் 42% பேர் மது அருந்துதல், போதைப்பொருள் பயன்பாடு, அதிகப்படியான உணவு உட்கொள்ளுதல் அல்லது தீவிரச் சமூக ஊடக பயன்பாடு போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளனர். தனிமையின் வேதனையைத் தீர்க்க/மறக்க நாடும் தீய பழக்க வழக்கங்கள் மேலும் ஆழமான பிரச்சனைகளை உருவாக்குகின்றன.

இந்தத் தனிமைப் பிரச்சினை பல காரணங்களுக்காக ஏற்படுகிறது! நோய் பரவும் அச்சம் ஒரு காரணம் என்றால் மத வேறுபாடுகள், சக மனிதனிடம் நம்பிக்கை இல்லாமல் வேறுபாடுகள் காரணமாக விளைந்த அச்சம், அமெரிக்காவில் நடந்த பல துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள், இனப்பாகுபாடு காரணமான வன்முறைகள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் நடிகர் ஜீன் ஹாக்மன், அவர் மனைவி இரண்டு பேரும் இறந்து சில நாட்கள் கழித்தே கண்டுபிடிக்கப்பட்டார்கள். அவர் மனைவி நுரையீரல் நோயால் இறந்ததைக் கூட மறதி நோயால் பீடிக்கப்பட்டிருந்த ஜீன் ஹாக்மன் உணர்ந்திருக்கவில்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்பட அவரும் உயிரிழந்தார். பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவலர்களுக்குச் சொல்ல ஒரு வாரத்திற்கு பின்னே சடலங்கள் மீட்கப்பட்டன.  இந்த சம்பவம் அமெரிக்க நகர்ப்புறத் தனிமையின் கொடூரமான முகத்தைக் காட்டுகிறது.

“பழைய காலங்களில், ‘ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமம் தேவை’ என்று அமெரிக்காவில் சொல்வார்கள். இன்றோ, குழந்தைகள் மெய்நிகர் உலகில் வளர்கிறார்கள், அங்கு அவர்களைக் கவனிக்க யாருமில்லை,”. “மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்கள் தளங்களை ‘இணைப்புக் கருவிகள்’ என விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில், இவை நம்மை உண்மையான மனித உறவுகளிலிருந்து துண்டித்து, போலியான டிஜிட்டல் உறவுகளுக்கு அடிமையாக்குகின்றன.” குழந்தைகளை அக்கம் பக்க வீட்டுக்கு அனுப்பக் கூட யோசிக்க வேண்டிய சூழலில் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அதனாலும் தனிமை அதிகரிக்கிறது. பல வீடுகளில் இப்போதெல்லாம் கூடப்பிறந்தவர்கள் என யாரும் இருப்பதில்லை.

ஒரே வீட்டுக்குள் இருந்தும் ஒவ்வொருவரும் தனித்தனி உலகங்களில் வாழ்கின்றனர். பெற்றோர்கள் பணிச்சுமையிலும், குழந்தைகள் மெய்நிகர் உலகிலும் மூழ்கியிருக்கின்றனர். இந்த அபாயகரமான போக்கை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், வயது முதிர்ந்தோரில் 35% பேர் தனிமையில் வாழ்வதாகவும், இதில் 60% பேர் தங்கள் பிள்ளைகள் தொலைதூரத்தில் வாழ்வதால் ஏற்படும் உணர்வு ரீதியான தனிமை குறித்து வருத்தம் தெரிவித்தனர். இதில் பலர் ஆரோக்கியப் பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள்.

தனிமையை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சமுதாயத்திலிருந்து (social isolation), சமுதாய விழாக்கள் போன்றவற்றிலிருந்து ஒதுங்கி இருத்தல். மற்றொன்று உணர்ச்சிப் பூர்வமாகத் தனிமையாக இருத்தல் (emotional isolation). இந்த தனிமைப்படுத்துதல் பல காரணங்களுக்காக ஏற்படுகின்றன.

  1. சூழ்நிலை பொறுத்து வரும் தனிமை (situational): கலாசாரம், இன பிரிவுகள், புலம்பெயர்தல், புதிய சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள முடியாமை
  2. வளர்ச்சி அடையும் போது வரும் தனிமை (Developmental): வீட்டுப் பழக்கம், பெற்றோர்கள் சொல்லித்தந்த கொள்கைகள், வீட்டுப் பெரியவர்களின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி ஏற்படுத்திக்கொண்ட தனிமை
  3. தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட தனிமை (Internal): பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்பட்ட தனிமை, அச்சம் முதலிய உள்ளுணர்வுகளால் ஏற்படுத்திக்கொண்ட தனிமை. தொழில் நுட்பக் கருவிகளோடு பழகி, முகம் தெரியாதோரிடம் ஏற்பட்ட ஒரு பாதுகாப்புக் கவசத்தால் நேராகப் பழக விரும்பாமல் ஏற்படுத்திக்கொண்ட தனிமை

இதில் இருந்து நம்மை எப்படி மீட்பது? வரும் வாரங்களில் காணலாம்.

Author

You may also like

Leave a Comment