Home கவிதைமுகவரிகளின் வாசனை

வளைந்து தொங்கும் நிலாவின் விளிம்பில்
மிதக்கும் என் பாதங்கள்
நிகழ்காலத்தின் காலணிகளை அணியும்போது
காற்றோடு கரைந்துபோகிறது
என் ஆதி முகவரிகளின் வாசனை

ஒவ்வொரு வாசலையும் கடக்கும் நேரம்
காலம் தோல் உரித்துக் கொள்ளும்போது
உதிர்ந்து விழும் என் நிழல்கள்
யாரோ விட்டுச்சென்ற நிழற்படத்தை
தன் முகம் என நம்ப முயல்கின்றன

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை
மெல்லத் திருடிக் கொண்டு
முட்களைச் சொருகி வைக்கும்
விசித்திர வேடத்திற்கு
பக்குவமென்றும் அனுபவமென்றும் பெயரிட்டு
நிறுவுந்தோறும்
இருண்ட வானில்
தன் பழைய கூட்டைத் தேடி அலையும்
ஒரு இறக்கையற்ற பறவையாய்
மிதந்து கொண்டிருக்கும்
என் குழந்தைப்பருவச் சிரிப்புடன்
யாருமற்ற வீதியில்
தன் சொந்தக் குரலையே தொலைத்துவிட்டு
தேடிக்கொண்டிருக்கிறது ஒரு வெற்று எதிரொலி.

Author

You may also like

Leave a Comment