Home இலக்கியம்ஈற்றடிக்கோர் பாட்டு – 7

ஈற்றடிக்கோர் பாட்டு – 7

by Iyappan Krishnan
0 comments

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “இன்பமெனக் கொண்டிடும் இன்று” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

அன்பால் அகிலத்தை ஆளலாம் அன்போடு
முன்பே முறுவலித்து முந்துக! – என்றென்றும்
பொன்னான நட்பினைப் போற்றிப் புகழுமனம்
இன்பமெனக் கொண்டிடும் இன்று
.

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்.

சின்னக்கண்ணன்:
வானத்துச் சந்திரனும் வண்ணமாய்க் காயுதென
ஆனபடி வஞ்சியும் அன்றுகொண்ட ஊடலும்
நின்றிருக்கும் வண்ணமுகம் செம்மையாய் நேர்ந்ததை
இன்பமெனக் கொண்டிடும் இன்று

மாலா மாதவன்:
எண்ணத்தில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள்
வண்ணமாய் வாழ்வை வரைந்துவிடும் – திண்ணையது
என்னே சுகமென் றிருந்தமர்ந்த பேச்சைமட்டும்
இன்பமெனக் கொண்டிடும்! இன்று!

இப்னு ஹம்துன்:
ஒன்றும் புரியா வயதில் உளமெல்லாம்
என்றுமே யாவருக்கும் எல்லாமும் – என்றிருக்கும்
சென்றுவிட்ட காலத்தைச் சிந்தையில் கண்டுவர
இன்பமெனக் கொண்டிடும் இன்று.

கண்மணி பாண்டியன்:
கணினியை மறந்து
கைபேசியை துறந்து
நான்கு சுவற்றை கடந்து
காற்று வெளியில் நடந்து
இயற்கையில் கலந்து
மனமும் உடலும் தெளிந்து
இன்பமெனக் கொண்டிடும் இன்று.

ஹேமா செந்தில்:
கள்ளங்கபடமில்லா நட்பு
எள்ளளவும் வினயமில்லா பால்ய நட்பு
பள்ளியில் கனிந்த நட்பு
உள்ளம் துழாவிய நட்பு
வெள்ளந்தியான நட்பு அது..
துள்ளி விளையாடிய காலம்
எள்ளி நகையாடிய காலம்
மீட்டெடுக்க முடியாது-ஆயினும்
மீண்டும் மீண்டும் வருடும் சுகமது..
நினைக்க நினைக்க நன்று
நனைந்தோம் நட்பு மழையில் அன்று
மனமாரக் கொண்டாடிய ஒன்று
இன்பமெனக் கொண்டிடும் இன்று.

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

You may also like

Leave a Comment