1.
புழுதியில் ஒரு இறகு
புரட்டுகிறது காற்று.
தரையில் வானம்.
2.
கரையும் மாலைக்காகம்
இறக்கைகளுக்குள் மடங்கும் பகல்
பதிலளிக்கும் மெளனம்.
3.
சிறகுக்கு வழிவிடும் பனி
நகர்கிறது காலை
காற்றின் பாதையில்.
4.
மேலெழும் தேநீர் ஆவி
கடை உத்திரத்தில் குருவி
கோப்பையின்றி வெதுவெதுப்பு.
5.
அமைதியான நீர்
ஒற்றைக் காலில் கொக்கு
மங்கும் மாலை.
6.
காரிருள்
இரு ஒளிப்புள்ளிகள்
ஆந்தையின் கண்கள்.
7.
வெள்ளி மேகங்கள்
மழையில் நனைந்த புறாக்கள்
சொட்டச் சொட்டத் தெருக்கள்.
8.
சாம்பல் வானம்
பச்சைக்கிளியின் கீச்சு
மறுக்கிறது புயலோடு கரைய.
9.
ஒலிகளோடு விடியல்
விவாதத்தில் பறவைகள்
எவர் பக்கமும் இல்லை சூரியன்.
10.
பறவை சென்ற பின்னும்
ஆடுகிறது கிளை
தீண்டலின் நினைவில்.
*
‘பறவை’ குறுங்கவிதைகள் 10: ராமலக்ஷ்மி
*