Home இதழ்கள்இதழ் - 7நல்லாச்சி – 16
This entry is part 16 of 17 in the series நல்லாச்சி

ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்
எட்டித்துரத்தும் கோழியின் போக்கு
கொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்கு
நல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்
‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்
அதுகளுக்கேது போக்கிடம்’

வெதும்பும் பேத்தியை
தேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்
‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்
கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்
‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்
புரியாமல் தலைசொரியும் பேத்திக்கு
இரைதேடல் முதல்
இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்
குழந்தைகளை
சுயமாய் வாழச்செலுத்துதலே
தவிர்த்துவிடுதல் என விளக்குகிறாள்

எனில்
மனிதர்கள் மட்டும் ஏன்
குழந்தைகளைத் தவிர்த்துவிடுவதில்லையென்ற
பேத்தியின் கேள்விக்கு
நல்லாச்சி வாயடைத்து நிற்க
செல்லாச்சி பதிலிறுக்கிறாள்
மனிதப்பிறவியில்
எல்லாக் கேள்விகளுக்கும் விடையேது மகளே
தலையாட்டிக்கொண்ட பேத்தி
தானியத்தை இறைக்கிறாள்
அம்மையாய் எண்ணி அணைகின்றன
அத்தனை குஞ்சுகளும்.

Series Navigation<< நல்லாச்சி – 15நல்லாச்சி – 17 >>

Author

You may also like

Leave a Comment