அக்னி நட்சத்திரம்

1.
எங்கும் வெயில்
வெப்பச் சாலைகளில் நிசப்தம்
நீளும் மதியம்.

2.
சுருங்கி மறையும் நிழல்கள்
தலைக்கு மேல் நண்பகல்
கனக்கும் அமைதி.

3.
சுழலும் மின்விசிறி
சோம்பல் முறிக்கும் வட்டங்கள்
கரைகிறது நேரம்.

4.
பொன்னாக மாம்பழங்கள்
பிசுபிசுக்கும் கைகள்
ஒளியாக வழிகிறது இனிப்பு.

5.
சூடான நிலம்
வெற்றுப் பாதங்கள்
ஓடுகிறது குழந்தைமை.

6.
நெற்றியில் வியர்வை
உப்பு வெயிலின் சந்திப்பு
உடலோடு ஒட்டும் பகல்.

7.
தொலைதூரக் குயிலோசை
வெயிலில் வளையும் பாடல்
உருகும் எதிரொலி.

8.
சுருண்டு உடையும் சருகுகள்
குளிர்ச்சியைத் தேடும் காற்று
ஏங்கும் பூமி.

9.
அசையாத திரைச்சீலைகள்
வழி மறக்கும் தென்றல்
நிரம்பும் மெளனம்.

10.
வந்தது மாலை
ஆசுவாசிக்கிறது செவ்வானம்
தளர்கிறது வெப்பம்.

11.
சில்வண்டுகளின் ரீங்காரம்
பகலைக் குளிர்விக்கும் இரவு
மருந்தாகிறது இருட்டு.

12.
மண்பானைத் தண்ணீர்
தொண்டையில் குளிர்ச்சி
மண்ணைச் சுவைத்த நிம்மதி.

13.
கானலாகச் சாலைகள்
ஏமாற்றும் கண்கள்
சூடான கனவுகள்.

14.
ஆடாத பனைகள்
அவற்றின் தலைகளில் வெயில்
கொட்டாவி விடுகிறது பொழுது.

15.
வானில் முதல் கருமேகம்
நீலக்கடலில் நம்பிக்கை
காத்திருக்கிறது மழை.

**

குறுங்கவிதைகள் மற்றும் குயில் படம்: ராமலக்ஷ்மி

Author

  • ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

பரமசிவன் பாதம் பணி – அந்தாதி

தேயும் நிலா

ஒரு (தற்)கொலை நடக்கப்போகிறது