நல்லாச்சி – 30

This entry is part 30 of 34 in the series நல்லாச்சி

நடைப்பயிற்சி வேண்டுமாம் நல்லாச்சிக்கு
அறிவுறுத்தி விட்டார் மருத்துவர்
நீரிழிவின் ஆரம்பப் படிநிலை
சற்றே தடதடக்கும் இதயம்
பலவீனமாகிறேனென மணியடித்துவிட்ட எலும்புகள்
இறுக ஆரம்பித்திருக்கும் மூட்டுகள்
என உண்டியல் காசைப்போல் சேமித்திருக்கும்
உடல் நலிவை ஆற்றும்
மென் நடையும் மென் பயிற்சியும்
தன்னால் ஆகாதென்கிறாள்
டாக்டரின் படிப்பையே சந்தேகிக்கிறாள்

சாக்குப்போக்குச் சொல்லியும்
மெய்யே போல் பொய்க்கோபம் கொண்டும்
எல்லாவற்றையும் ஒதுக்குகிறாள்
வீட்டுக்குள் நடப்பது கணக்கில்லையா என்கிறாள்
கலகலத்துக்கிடக்கிறது வீடு
களேபரமான ஓர் நாளில்
இடைவெளியற்று இருமிய பேத்தி
தளர்ந்து சரிகிறாள் எல்லோரும் பதற

ஒருமண்டலமாய் விடியலில்
ஓயாது பிரகாரம் சுற்றுகிறாள் நல்லாச்சி
அடிப்பிரதட்சணமென்ன நெய்விளக்கென்ன
அங்கப்பிரதட்சணமென்ன எள்விளக்கென்ன
என்னென்ன விரதமென்ன எல்லாவும்
ஏற்கிறாள் பேத்திக்கென
பொய்நோய்க்காய் பெற்றோரிடம் மன்னிப்பு வேண்டியபின்
கோவிலிலிருக்கும் அம்மையப்பனிடமும் வேண்டுகிறாள் பேத்தி
தினம் நூறு தோப்புக்கரணங்களுடன்.

Series Navigation<< நல்லாச்சி – 29நல்லாச்சி – 31 >>

Author

Related posts

பேரன்பின் சாட்சியங்கள் – அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…

*திம்மராஜபுரத்துக் கதைகள்* –  நூல் விமர்சனம்

திருவை மு.இரா. கவிதைகள் – 5