நடைப்பயிற்சி வேண்டுமாம் நல்லாச்சிக்கு
அறிவுறுத்தி விட்டார் மருத்துவர்
நீரிழிவின் ஆரம்பப் படிநிலை
சற்றே தடதடக்கும் இதயம்
பலவீனமாகிறேனென மணியடித்துவிட்ட எலும்புகள்
இறுக ஆரம்பித்திருக்கும் மூட்டுகள்
என உண்டியல் காசைப்போல் சேமித்திருக்கும்
உடல் நலிவை ஆற்றும்
மென் நடையும் மென் பயிற்சியும்
தன்னால் ஆகாதென்கிறாள்
டாக்டரின் படிப்பையே சந்தேகிக்கிறாள்
சாக்குப்போக்குச் சொல்லியும்
மெய்யே போல் பொய்க்கோபம் கொண்டும்
எல்லாவற்றையும் ஒதுக்குகிறாள்
வீட்டுக்குள் நடப்பது கணக்கில்லையா என்கிறாள்
கலகலத்துக்கிடக்கிறது வீடு
களேபரமான ஓர் நாளில்
இடைவெளியற்று இருமிய பேத்தி
தளர்ந்து சரிகிறாள் எல்லோரும் பதற
ஒருமண்டலமாய் விடியலில்
ஓயாது பிரகாரம் சுற்றுகிறாள் நல்லாச்சி
அடிப்பிரதட்சணமென்ன நெய்விளக்கென்ன
அங்கப்பிரதட்சணமென்ன எள்விளக்கென்ன
என்னென்ன விரதமென்ன எல்லாவும்
ஏற்கிறாள் பேத்திக்கென
பொய்நோய்க்காய் பெற்றோரிடம் மன்னிப்பு வேண்டியபின்
கோவிலிலிருக்கும் அம்மையப்பனிடமும் வேண்டுகிறாள் பேத்தி
தினம் நூறு தோப்புக்கரணங்களுடன்.