அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா

This entry is part 34 of 34 in the series அசுரவதம்

மலைப்பாறைகளைக் குடைந்து, இரும்பைக் காய்ச்சி ஊற்றி வடிக்கப்பட்ட பிரம்மாண்டமான கதவுகளைக் கொண்டது கிஷ்கிந்தையின் கோட்டை. முன்னிரவு விலகி, விடியல் சற்றே மயங்கும் அந்தக் காலை வேளையில், சந்தனமும் அகிலும் மணக்கும் அரண்மனையின் அந்தப்புரத்தில் வாலி சிறு துயில் கொண்டிருந்தான். அவனது மலைச்சிகரம் போன்ற பரந்த மார்பு, சீரான மூச்சுக்காற்றில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது.

திடீரென்று, கோட்டை வாசலுக்கு வெளியிலிருந்து ஒரு பயங்கரமான பேரரவம் கேட்டது.

பல மாதங்களாகத் தன் நிழலைக் கண்டே அஞ்சி நடுங்கிய ஒருவனின் தொண்டையிலிருந்து, மரணத்தையே அறைகூவி அழைக்கும் அத்தனைப் பெரிய சத்தம் எப்படி எழ முடியும்? அந்தப் பேரோசையின் அதிர்வில், அரண்மனையின் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த நவரத்தினக் கற்கள் கூடச் சற்றே அதிர்ந்து உதிரத் தொடங்கின.

வாலியின் கண்கள் சட்டென்று திறந்தன. அந்தப் பார்வையில் உறக்கத்தின் சாயல் இல்லை, மாறாகப் பிரளயத்தின் சீற்றம் இருந்தது.

“எவனவன்! என் ஒரு விரல் அசைவுக்குப் பயந்து மதங்க வனத்தில் பதுங்கிக் கிடந்த அந்தக் கோழை சுக்ரீவனா இத்தனை தைரியமாக என் கோட்டை வாசலில் வந்து நிற்பது? இவனுக்கு மரணம் தன்னை அழைப்பது கேட்கவில்லையா?” என்று சிங்கமெனச் சீறியபடி, வாலி தன் கதாயுதத்தை எடுக்க முற்பட்டான்.

அப்போது தாரை அவனைத் தடுத்தாள். அவள் ஓடிச் சென்று வாலியின் அகன்ற மார்பின் மீது விழுந்து அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.

ஆணின் வீரம் பல நேரங்களில் அவனது விவேகத்தைத் தின்று அகங்காரமாக வளரும். ஆனால் ஒரு பெண்ணின் பேரன்பு, வரப்போகும் ஊழ்வினையின் வாசனையை முன்கூட்டியே நுகரும் ஆற்றல் கொண்டது. வேட்டையாடப்பட இருந்து, பின் அஞ்சி ஓடிய ஒரு மிருகம், சட்டென்று திரும்பி நின்று வேடனைப் பார்த்துச் சீறுகிறது என்றால், அது அதன் தைரியமல்ல, அதற்குப் பின்னால் கிடைத்திருக்கும் ஒரு மாபெரும் துணையின் தைரியம். அதைத் தாரை நன்கு அறிந்திருந்தாள்.

“ஐயனே, நில்லுங்கள். தயவு செய்து என் வார்த்தைகளைக் கேளுங்கள். கோபத்தில் உங்கள் விவேகத்தை இழந்துவிடாதீர்கள். வெளியே ஒலிக்கும் இந்தப் பேரரவம்…”

“தாரை, அது சுக்ரீவனுடையது. நான் நன்கறிவேன். அவனைக் கொல்வது அல்ல என் நோக்கம். ஆனால் தேவை எனில் அதையும் செய்வேன். மைந்தனைப் போன்றவன் என்று அவனுக்காக என்னிடம் பரிந்து பேச வரவேண்டாம்!” என்றான் வாலி.

“மன்னிக்க வேண்டும் அரசே, நீங்கள் அந்தக் குரலை உங்களின் எதிரியின் குரலாக மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால் நான் அபாயத்தின் குரலாகப் பார்க்கிறேன்,” எனத் தாரை சொன்ன அடுத்த நொடி, அரண்மனையே அதிரும்படி நகைத்தான் வாலி.

வாலி அவளை அலட்சியமாகப் பார்த்தான்.

“தாரை, உன் பெண் புத்தி பயத்தில் பிதற்றுகிறது. அவனுக்குப் பின்னால் எவன் வந்தால் எனக்கென்ன? விலகு!” என்றான்.

தாரை அவனை விடவில்லை. அவள் குரல் இப்போது ஆழமான எச்சரிக்கையாக மாறியிருந்தது.

“அரசே, அகங்காரம் அறிவைக் குருடாக்கும். ஆனால் உங்களை நேசிக்கும் என் இதயம் வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்கிறது. இது என் சுயநலம் மட்டுமில்லை, இந்த நாட்டின் நலனும் கூட. என் ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தியை முழுமையாகக் கேளுங்கள். சுக்ரீவன் தானாக இங்கே வரவில்லை, அவன் அங்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான்!”

வாலி சற்றே புருவம் சுருக்கினான்.

“யாரால்?”

“அயோத்தி மன்னன் தசரதனின் மைந்தர்கள் இராமனும் இலக்குவனும் சுக்ரீவனோடு ரிஷ்யமுக மலையில் நெருப்பின் சாட்சியாக நட்புப் பூண்டுள்ளனர். அந்த இராமன் ஏழு பெரு மரங்களை ஒரே அம்பில் துளைத்தவன். மேலும், உங்கள் தம்பிக்கு இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது என்று நினைத்தீர்கள்? அது அவனது தைரியமல்ல, இராமனின் வில் கொடுத்த மன உறுதி!”

தாரை மூச்சு வாங்கினாள். வாலியின் கண்களில் இராமன் பெயர் கேட்டதும் பெரிய மரியாதை உருவாகியது. வாலி தாரையின் வார்த்தைகளைக் கேட்டு ஒரு கணம் அமைதியானான்.

“தாரை, இராமனைப் பற்றி நான் அறிவேன். அவன் அறம் தவறாதவன். அவன் மட்டுமல்ல, அக்குலத்தில் பிறந்த யாருமே அறம் தவறியதில்லை.”

“நான்…” ஏதோ சொல்ல வந்த தாரையைத் தடுத்து மேலும் பேசினான் வாலி. அவனது கண்கள் அயோத்தியின் நந்திகிராமத்தைக் கண்டன. அங்கே மரவுரி தரித்திருக்கும் பரதனின் கோலத்தைக் கண்டன. அவன் உள்ளம் நெகிழ்ந்திருந்தது; சொற்களில் பெரும் கனிவு கூடியிருந்தது.

“உனக்குத் தெரியுமா தாரை? இராமனின் தம்பி பரதனைப் பற்றிச் சொல்கிறேன் கேள். அண்ணன் அரசு இழந்து காடு சென்ற நாள் முதல், தன் இருப்பே வீண் என்று பரதன் ஒரு பெரிய பள்ளம் தோண்டி அந்தப் பள்ளத்துக்குள் தான் உறங்குகிறான். மேலும் சொல்லவா? அண்ணன் துயருக்குக் காரணமாய் இருந்தாள் என்பதற்காக மந்தரையைக் கொல்லச் சென்ற சத்துருக்கனனையும், ‘பெண்ணைக் கொன்ற பாவம் வேண்டாம்’ எனத் தடுத்து நிறுத்தியவன் பரதன். அப்படியான பரதனின் அண்ணனான இராமனா அறம் தவறி என்னை எதிர்ப்பான்?” என்ற வாலியை இடைமறித்தாள் தாரை.

“இராமன் அறம் தவறாதவன் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை ஐயனே. ஆனால் நீங்கள் அறம் என நினைப்பதும், பேரரசர்களின் அறமும் ஒன்றேயாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்களின் எதிரியான சுக்ரீவனுடன் தீவலம் வந்து நட்பாகி இருக்கிறார்கள் இராமனும் இலக்குவனும். எச்சரிக்கை தேவை அரசே!” என்றாள் தாரை.

மறுகணமே வாலியின் அகங்காரம் ஒரு பெரும் இடிமுழக்கம்போலச் சிரிப்பாக வெடித்தது.

“தாரை, அந்த மானிடர்கள் ஏழு மரங்களை வீழ்த்தியிருக்கலாம். ஆனால் நான் யார் தெரியுமா? இராவணன் என்ற அந்த அகிலத்தையே ஆளும் அரக்கனைக் குழந்தையைப் போல என் வாலில் சுருட்டிக்கொண்டு ஏழு கடல்களிலும் நீராடியவன் நான். எனக்கா மனிதர்களைப் பார்த்துப் பயம்?” என்று ஏளனமாகச் சிரித்தான் வாலி.

பின்பு தாரையின் தோள்களைப் பிடித்துத் தன்னை நோக்கிக் கூறினான்.

“நீ அறிவாளி தாரை, கிஷ்கிந்தையின் மதிமந்திரியும் கூட. ஆனால் என் பலத்தின் முழுப் பரிமாணமும் உனக்குப் புரியவில்லை. என் கழுத்தில் இருக்கும் இந்த மாலையைப் பார்.”

வாலியின் அந்தப் பரந்த மார்பில், ஆயிரம் சூரியன்களின் ஒளியை ஒருங்கே திரட்டியது போல ஒரு தங்க மாலை சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அது ஒரு தெய்வீகக் கவசம்.

“இது என் தந்தை தேவேந்திரன் எனக்கு அளித்த இந்தக் காஞ்சன மாலை. இது என் கழுத்தில் இருக்கும் வரை, என்னை நேருக்கு நேர் நின்று போரிடும் எவனாலும் வீழ்த்த முடியாது தாரை. என்னை எதிர்த்து என் கண்முன் நிற்கும் எதிரியின் பலத்தில் சரிபாதி அப்படியே எனக்கு வந்துவிடும் என்பது என் வரம். அந்த இராமனே என் முன் வந்து நின்றாலும், அவனது பலத்தில் பாதியை நான் பெற்றுவிடுவேன். அவனது அம்பு என்னை எப்படித் துளைக்கும்? என் வரம் ஒருபோதும் பொய்க்காது!”

வாலியின் அகங்காரம் அவனது அறிவைக் குருடாக்கியிருந்தது. வரங்கள் என்பவை கவசங்கள்தான். ஆனால், அதர்மத்தின் பாதையில் ஒருவன் நடக்கும்போது, அதே கவசமே அவனது கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிறாக மாறும் என்ற தத்துவத்தை அவன் உணரவில்லை. அறத்தின் நாயகனான, வீரன் இராமன், வாலியின் வரத்தைப் பொய்யாக்க, நேருக்கு நேர் நிற்காமல் மறைந்திருந்து அவனை எப்படி வீழ்த்துவான் என்ற எண்ணம் வாலிக்கு உருவாகவில்லை.

“கவலை வேண்டாம் தாரை, சுக்ரீவன் இன்று என் கையால் அடி வாங்கி இனி இந்தப் பக்கமே திரும்பப்போவதில்லை, அல்லது என் கையால் சாகப்போகிறான். இது உறுதி!” என்று கூறி, தாரையை மென்மையாக, ஆனால் உறுதியாகத் தள்ளிவிட்டு வாலி அரண்மனையை விட்டு ஒரு புயலைப் போல வெளியேறினான்.

தாரை செய்வதறியாது கண்ணீருடன் சிலையாக நின்றாள். விதியின் கைகள் கிஷ்கிந்தையின் கழுத்தை இறுக்கத் தொடங்கிவிட்டன என்பதை அவள் முழுமையாக உணர்ந்தாள்.

வெளியே, சுக்ரீவனின் பேரொலிக்கும் வாலியின் சீற்றத்திற்கும் இடையே ஒரு மாபெரும் பிரளயம் உருவாகிக் கொண்டிருந்தது. இருவருக்கும் இடையே கடும் மோதல் உருவாகியது. இடிபாடுகளுக்கிடையே இரு மலைகள் மோதுவதைப் போல அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

ஆரம்பத்தில் சமமாக நடந்த அந்த மோதல், போகப் போக ஒருதலைப்பட்சமானது. வாலியின் கை உயர்ந்தது. சுக்ரீவனின் உடல்.. பலமான தாக்குதல்களுக்கு உள்ளாகி, தாள முடியாத வலியுடன் அவன் தப்பியோடி மறைந்தான்.

அங்கே மரங்களின் பின்னிருந்து பல கண்கள் இவை அனைத்தையும் தீவிரமாகக் கவனித்துக்கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு இராமனுடையவை.

பி.கு:

பரதன் இராமனுக்காகத் தரையில் குழி தோண்டி படுத்திருந்ததாகக் கூறப்படும் கதைகள் தமிழகத்தின் தெருக்கூத்து (குறிப்பாக வட ஆற்காடு, செங்கல்பட்டு பகுதிகளில் நடக்கும் இராமாயணக் கூத்துகள்) மற்றும் வில்லுப்பாட்டு மரபுகளில் காணப்படுகின்றன.

வால்மீகி இராமாயணத்தில் வாலியின் காஞ்சன மாலை குறித்துப் பேசப்பட்டாலும், பாதி பலம் பெறும் வரம் குறித்த விவரங்கள் கிடையாது. கம்பனும் இதைப் பற்றிப் பெரியதாகப் பேசவில்லை. இலைமறை காயாகத் தான் சொல்லியிருக்கிறான் கம்பன்.

சமஸ்கிருதப் புராணங்களில் (விஷ்ணு, பாகவதம், மகாபாரதம்) வாலிக்கு இந்திரன் தந்த மாலை குறித்த விவரங்கள் உண்டு.

மேலும், வால்மீகியில் இராமன் மறைந்து நின்று கொல்வதை நியாயப்படுத்தப் போதுமான காரணம் இல்லை. அதை ஈடுகட்ட ‘எதிரியின் பலத்தில் பாதியை வாலி பெறுவான்’ என்ற செய்தி சமஸ்கிருதத்தில் அத்யாத்ம இராமாயணம் போன்ற பிற்கால நூல்களில் தான் முதலில் விரிவாகப் பேசப்பட்டது

Series Navigation<< அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 –  இரு மகளிர் .. இரு சிந்தனை.

Author

Related posts

ஜப்பானிய சிறுவர் கதைகள் 19 – மொழியாக்கம்

நல்லாச்சி – 30

தொலைவிலிருந்து கேட்கும் பாடல்