மழை பொய்த்த அவ்வருடம்
அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்
கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்
வெடித்து அழுகிறது நிலம்
மழைக்கஞ்சியை உண்டுவிட்டு
மௌனம் சாதிக்கும் கடவுளர்முன்
இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம்
அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிட
அடாபுடாவென வந்திறங்குகிறது இடி
நல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்
கருகிய வாழைமரத்தூரில்
தங்கமாய் உறைந்திருக்குமென்று
பொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம்
அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்
அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணை
கிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான்
ஆறடி ஆழத்துக்கு
பொங்கிவந்த ஊற்றொன்று வானத்தையெட்டுகிறது
இதுதான் தங்கமெனச்சுட்டுகிறாள் நல்லாச்சி
உயிர் வளர்க்கும் அமுதத்தை
ஊருக்காய் நேர்ந்து விடுகிறாள்
எண்ணியெண்ணி வாழ்த்துகின்றனர் தலைமுறைக்கும்.