நல்லாச்சி – 38

This entry is part 38 of 38 in the series நல்லாச்சி

மழை பொய்த்த அவ்வருடம்
அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்
கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்
வெடித்து அழுகிறது நிலம்
மழைக்கஞ்சியை உண்டுவிட்டு
மௌனம் சாதிக்கும் கடவுளர்முன்
இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம்

அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிட
அடாபுடாவென வந்திறங்குகிறது இடி
நல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்
கருகிய வாழைமரத்தூரில்
தங்கமாய் உறைந்திருக்குமென்று
பொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம்

அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்
அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணை
கிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான்
ஆறடி ஆழத்துக்கு
பொங்கிவந்த ஊற்றொன்று வானத்தையெட்டுகிறது
இதுதான் தங்கமெனச்சுட்டுகிறாள் நல்லாச்சி
உயிர் வளர்க்கும் அமுதத்தை
ஊருக்காய் நேர்ந்து விடுகிறாள்
எண்ணியெண்ணி வாழ்த்துகின்றனர் தலைமுறைக்கும்.

Series Navigation<< நல்லாச்சி – 37

Author

Related posts

தான வீர சூர கர்ணன் – 5

அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்

அறிவெழுச்சி: 1