நல்லாச்சி – 37

This entry is part 37 of 37 in the series நல்லாச்சி

சந்தைவிலை சரியாய் அமையவில்லையாம்
கொட்டி வீசப்பட்டிருக்கின்றன காய்கனிகள்
கூடைகூடையாய் சாலையோரத்தில்
எதிர்ப்புமுகம் காட்டும்விதமாய்
கண்டு பதைபதைக்கிறாள்
விவசாயியும் தாயுமான நல்லாச்சி
ஊனுறக்கம் மறந்து அல்லும்பகலும் காத்ததெல்லாம்
பயிர்வாடத் தான் வாடி நின்றதெலாம்
அழிய விடுவதற்காகவோவெனக் குமுறுகிறாள்

ஆதரவற்றோர்க்கு அளி
அதிக லாபமின்றி அள்ளிக்கொடு
அல்லது
விளைந்ததின் மதிப்பை விவேகமாய்க்கூட்டு
விழுந்த விலைக்காய் நீயும் சோர்ந்தால்
உழைத்த நிலத்தின் உதிரம் வற்றாதோ
பக்குவம் செய்த மாங்காயை
சாடியின் இருட்டுள் தவம் செய்ய வை
தக்காளியை அழலேற்றிப் பதனிடு
விளைவித்த நீயே விலையதிகாரியாவாய்
நிலத்தின் அறத்தையும் காப்பாயாக

அதுகாறும் அழுதவன் யோசிக்கிறான்
எந்நிலையிலும் கைவிடா பூமியை
தானும் கைவிடலாகாதெனத் தெளிகிறான்
மாற்றுவழி ஆயிரம் பிழைப்பிற்காய் இருக்க
காற்றைப்போல் அலைபாய்தல்
தகுமோவென எண்ணுகிறான்
பலனடையும் நடுவர்களை விலக்கி
அறுவடை நேரே அடுப்புக்குச்செல்ல
பாதை சமைக்க ஆரம்பிக்கிறான்
பயணம் இனி இனிதாய் அமையட்டும்..

Series Navigation<< நல்லாச்சி – 36

Author

Related posts

உலகின் பெருவிழா – கால்பந்துப் போட்டி

உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி

எண்ட் டோஹ் த்ரெ – 3