வெயில் ஆடும் சுவர்

பாயின் மேல்
தன் பொம்மைகளை நிறுத்துகிறாள்.
முதலில் டெடி, அருகே
ஒற்றைக் காலணியைத் தொலைத்த பார்பி,
மர ரயில், சிவப்பு ஜீப்,
தூக்கக் கலக்கத்தில் நாய்க்குட்டி,
துடிக்கும் மீசையுடன் பூனை,
தும்பிக்கை தூக்கிய யானை.
நேர்த்தியான வரிசையில்
அனைத்தையும் அடுக்குகிறாள்.

சாக்பீஸைக் கையில் பிடித்து
கோணலாக, ஆனால்
தெளிவாக எழுதுகிறாள்.
“நான் சொல்வதை
அப்படியே சொல்லுங்கள்”
இனிமையாக அழைக்கிறாள்,
சுவர்களில்
வெயில் ஆடிக் கொண்டிருக்கையில்.

பராக்கு பார்த்த
பார்பியைக் கண்டிக்கிறாள்,
நேராக எழுதிய டெடிக்கு
நட்சத்திரம் வழங்குகிறாள்,
“சத்தம் போடாதே” என
ரயிலை அதட்டுகிறாள்,
அவளது சிரிப்பொலி
அறை முழுவதும்
சுழன்றாடுகிறது.

மென்மையான குரலில்
தன் ஆசிரியையின் முகபாவனையை
அப்படியே பிரதிபலிக்கிறாள்.
தனக்குத் தெரிந்த உலகத்தை
அவர்களுக்குக் கற்பிக்கிறாள் –
பட்டாம்பூச்சிகள், மேகங்கள்,
மஞ்சள் ரோஜாக்கள் பற்றி.

கதவுக்கு வெளியே,
வீடு அமைதியாக இருக்கிறது.
மிக அமைதியாக.
அந்த நிசப்தத்திலும்
அவள் தொடர்ந்து கற்பிக்கிறாள் –
பொம்மைகள் கற்க வேண்டும்
என்பதற்காக அல்ல,
கேட்பதற்கு யாருமற்ற
பேரமைதியின் இரைச்சலை
எதிர்கொள்ளத் தெரியாதவளாய்.
*

Author

  • ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

தமிழே! அமிழ்தே! – 11

வலைப்பூ – 7 (இறுதிப்பகுதி)

திருவை மு.இரா. கவிதைகள் -2