வகுப்பறை கீதங்களில்
வரவேற்றிடும்
வாழ்த்து மழை.
பிஞ்சுகளின் கரங்களில்
தேகத்தில் பாய்கிறது
பனித்துளிகளின் குளிர்ச்சி.
கொஞ்சிடும் பேச்சுகளில்
ராகங்கள் கூட்டிடும்
இசைச்சுரங்களின் சேர்க்கை.
எண்ணங்கள் விரித்திடும்
சின்னச் சின்னக் கனவுகளில்
வகுப்பறையெங்கும்
வண்ணத்துப்பூச்சிகள்.
குடும்பத்தை வினவுகையில்
விழியும் மொழியும்
விளிம்பிடும் உற்சாகம்.
புத்தகம் படிக்கையில்
மத்தாப்புச் சிதறலென
பிறந்திடும் சிந்தனைகள்.
ஐயத்தை எழுப்புகையில்
மனவாசனைகளில்
நிரம்பிடும் தெளிவு.
சித்திரங்களில் ஆடிடும்
நிறங்களின் கலவைக்குள்
மயில்தோகையின் பரிமாணம்.
பாராட்டும் பொழுதெல்லாம்
புன்னகை மலரென
பூத்திடும் பேச்சுப் பூக்கள்.
கவனக்குறைவால்
வசவுகள் பெறுகையில்
சுருங்கிடும் முகத்திலும்
அழகின் வெளிச்சம்.
உலகைக் கற்றிட
பள்ளியில் நுழைந்திடும்
குழந்தைகளால்
உயிர்ப்பிக்க முடிகிறது
கட்டிடத்தின் வாழ்வை.
அடித்தாலும் தவிர்த்தாலும்
அப்போதே மறந்துவிட்டு
அன்போடு ஓடிவரும்
குழந்தைச் செல்வத்திடம்
கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்
சொர்க்கத்தின் நிறைவோடு
பயணித்தல் எளிதாகும்.