Home கவிதைஎன்னவோர் எழுத்தாளர்! – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

என்னவோர் எழுத்தாளர்! – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

by Ramalakshmi Rajan
0 comments

இ. இ. கம்மிங்ஸிடம்
எனக்குப் பிடித்தது என்னவென்றால்-
அவர் சொல்லின் புனிதத் திரையைக்
கிழிந்தெறிந்து,
தனது வசீகரத்தாலும்
துணிச்சலான சாதுர்யத்தாலும்
அழுகிய போலித்தனத்தை
வெட்டிக் கடந்து செல்லும்
கட்டுக்கோப்பற்ற வரிகளை
நமக்கு அளித்தார்.

எவ்வளவு தேவையாக இருந்தது அது!
எவ்வளவு வாடிப் போயிருந்தோம் நாம்
பழைய
சோர்ந்த
பாணியில்.

ஆனால், பின்னர் வந்தார்கள்
அவரைப் பின்பற்றியவர்கள்,
அவரை நகலெடுத்தவர்கள்.
முன்பு கீட்ஸ், ஷெல்லி,
ஸ்வின்பர்ன், பைரன் போன்றோரை
மற்றவர்கள் நகலெடுத்தது போலவே,
இவர்களும் அவரை நகலெடுத்தார்கள்.

ஆனால்
நிச்சயமாக
ஒரே ஒரு
இ. இ. கம்மிங்ஸ் மட்டும்தான் இருந்தார்.

ஒரு சூரியன்.

ஒரு நிலா.

மூலம்: “What A Writer” By Charles Bukowski

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

சார்லஸ் புக்கோவ்ஸ்கி  (1920 – 1994)

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்துமே அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.

Series Navigation<< கவிதை வாசிப்புகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

Author

  • Ramalakshmi Rajan

    ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment