Home கவிதைவண்ணத்துப்பூச்சிகளின் பிரபஞ்சம்

வண்ணத்துப்பூச்சிகளின் பிரபஞ்சம்

1 comment

காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்ற
விதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தை
வாசித்தறியா பூக்கள்
ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன

காற்றின் கத்தரிக்கோலால்
உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டு
மண்ணின் ஆழத்தில் புதையப்போகும்
மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டு
தங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன

யாரோ வரைந்த ஓவியத்திலிருந்து
திடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்
உலகைப் பார்க்கும்
அவற்றின் பார்வையில்
வானம் ஒரு நீலநிற நதியாகவும்,
பூமி அதில் மிதக்கும் கனவாகவும் மாறுகிறது

விதியின் காலணிகள்
காத்திருக்கும் பாதையெங்கும்
அவை தன் பாட்டிற்கு இசைத்துக்கொண்டு
பிரபஞ்சத்தின் காதுகளில்
மௌனமான ரகசியங்களை கிசுகிசுக்கின்றன
அச்சமற்ற ஒரு அழகின் திமிரோடு

Author

You may also like

1 comment

Nizam Syed July 12, 2026 - 3:15 am

அருமையான கவிதை

Reply

Leave a Comment