7
காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்ற
விதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தை
வாசித்தறியா பூக்கள்
ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன
காற்றின் கத்தரிக்கோலால்
உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டு
மண்ணின் ஆழத்தில் புதையப்போகும்
மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டு
தங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன
யாரோ வரைந்த ஓவியத்திலிருந்து
திடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்
உலகைப் பார்க்கும்
அவற்றின் பார்வையில்
வானம் ஒரு நீலநிற நதியாகவும்,
பூமி அதில் மிதக்கும் கனவாகவும் மாறுகிறது
விதியின் காலணிகள்
காத்திருக்கும் பாதையெங்கும்
அவை தன் பாட்டிற்கு இசைத்துக்கொண்டு
பிரபஞ்சத்தின் காதுகளில்
மௌனமான ரகசியங்களை கிசுகிசுக்கின்றன
அச்சமற்ற ஒரு அழகின் திமிரோடு