Home கவிதைஇல்லாத எல்லாமும்

வானம் ஒப்புக் கொள்வதற்கு முன்னரே
அவளது இரவு தொடங்கி விடுகிறது

மங்கிய ஒளியில்
பழைய புடவைகளை மடிப்பது போல
பொழுதுகளை மடிமேல் விரித்து நீவுகிறாள்
நைந்து போன அதன் இழைகளில்
தூக்கியெறிய முடியாத காலம்

முடிவற்ற எண்ணங்களால் நிரம்பி வழியும்
அவளது மனதை அறிந்த தூக்கம்
ஒருபோதும் உள்ளே நுழைவதில்லை
ஆனால் அழைக்கப்படாமல்
உரிமையுடன் நினைவுகள் வருகின்றன
அவளருகில் அமர்ந்து
அவளறிந்த குரல்களில் பேசுகின்றன
அடர்ந்த நிசப்தத்தில்
தமக்குள் சிரிக்கின்றன

நினைவு கூர்கிறாள்
எப்போதோ பற்றிய கரங்களின் ஸ்பரிசத்தை
எங்கும் ஒலித்த பெயர்களை
பல திசைகளில் சுவாசித்த இல்லத்தை

முன்னோக்கி நகராமல்
அவளைச் சுற்றியே சுழல்கிறது கடிகாரம்
நேரத்தை அல்ல
நேரத்தில் எஞ்சியதை அளக்கிறது

இருளே சோர்ந்து போன நிசியில்
கண்கள் அகலத் திறந்திருக்க
அசைவின்றிப் படுத்துக் கிடக்கிறாள்

எண்ணுகிறாள்
சன்னலுக்கு வெளியே மின்னிய
நட்சத்திரங்களை அல்ல
இல்லாதவர்களை

அவளருகிலேயே
கனிவோடு காவலிருக்கிறது
தன்னை வெளிப்படுத்தி
அவளைக் காயப்படுத்த விரும்பாத
நிதர்சனம்…

தனிமை என்பது
மனிதர்கள் இல்லாதிருப்பது அல்ல
இனி இல்லாத எல்லாமும்
அங்கே நிறைந்திருப்பது.

Author

  • Ramalakshmi Rajan

    ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment