இருளின் நஞ்சை விழுங்கி
அமுதச் சுடரினைப் பொழியும்
மௌன மரங்களின் கனவுலகில்
சஞ்சரிக்கும் மேகங்கள்
பூக்களின் புன்னகையை உதிர்க்கின்றன.
தன் காயங்களை மறைத்து
பிரபஞ்சத்தை ஒளிரச்செய்யும்
தேவதையின் வெண்ணிறச் சிறகுகளை
இருட்டறையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது
ஒரு பேராசைக்காரனின் நிழல்.
சுரக்கும் அமுதக்கலசத்தை உடைத்து
அதில் தன் இருட்டைக் கலந்து
தன்னை வாழவைத்த பேரன்பின் கழுத்தை
மென்மையாக அறுத்துப் பலியிடுகிறான்
மண்ணின் ஆகச்சிறந்த சுயநலமியாம் மனிதன்
செய்வதறியாமல் வேடிக்கை பார்க்கிறார் கடவுள்.