Home கவிதைமழையின் ரீங்காரம் – (ஒன்பது குறுங்கவிதைகள்)

மழையின் ரீங்காரம் – (ஒன்பது குறுங்கவிதைகள்)

by Ramalakshmi Rajan
0 comments

1.
தரையில் இலையுதிர்க்கால இலை
காற்றில் சுழன்றாடும் குழந்தை
விழ அஞ்சுவதில்லை இருவரும்.

2.
ஓவிய நோட்டில் வண்ணத்துப்பூச்சி
உருளுகிறது கிரேயான்
சிறகுகள் பெறுகின்றன நிறங்கள்.

3.
காற்றில் உதிருகின்றன பூவிதழ்கள்
ஆச்சரியத்துடன் சேகரிக்கிறது குழந்தை
ஓட மறக்கிறது நேரம்.

4.
அந்திப் பூங்கா
கடைசிச் சிரிப்பைத் துரத்தும் எதிரொலி
ஆளற்று அசையும் ஊஞ்சல்.

5.
மழலையின் பள்ளி முதல் நாள்
ததும்பும் கண்ணீரும், சிறு புன்னகையும்
தைரியம் ரிப்பன்கள் அணியும்.

6.
பாதி அழிந்த மணற்கோட்டை
இரக்கமற்ற அலைகள்
சிரித்தபடி மீண்டும் துவங்குகிறது குழந்தை.

7.
மழை நீர் குட்டை
பிரதிபலிப்பைத் தொடும் சிறு கைகள்
அலை அலையாய் விழிக்கும் கனவுகள்.

8.
ஓடையில் மிதக்கின்றன காகிதப் படகுகள்
வட்டங்களைத் தைக்கின்றன மழைத்துளிகள்
பயணிக்கின்றன கனவுகள்.

9.
கூரையில் மழை முணுமுணுக்கிறது
குழந்தை திருப்பி முணுமுணுக்கிறது
ஒப்புக் கொள்கின்றன வானமும் பாடலும்.

Author

You may also like

Leave a Comment