மருத்துவர் பக்கம் – 35: பூட்டிய காருக்குள் நிகழும் மரணங்கள்

சமீப காலமாகப் பூட்டிய காருக்குள் நிகழும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காருக்குள் தூங்கிய மருத்துவர் மரணமடைந்திருப்பதும் பெரும் துக்கம். இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்து காருக்குள் நிகழும் மரணங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. தற்போதைய காலத்தில் மகிழுந்து எனும் கார் வைத்திருப்பது நம்மிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில், நாம் அனைவரும் இது குறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பது காலத்தின் கட்டாயமாகவும் உயிர்களைக் காக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

பூட்டிய கார்களுக்குள் ஏசி ஆன் செய்து விட்டு உறங்குவதும் ஆபத்து. வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக நேரம் நிற்க வேண்டி வந்தால், ஏசி ஆன் செய்திருந்தாலும் பல பேருடன் காருக்குள் இருப்பதும் ஆபத்து என்பதைப் பின்வரும் கட்டுரை ஆய்வுப் பூர்வமாக உங்களுக்கு விளக்கும் என்று நம்புகிறேன்.

பொதுவாக, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளே இவ்வாறு காருக்குள் விளையாடும் போது தெரியாமல் ஆட்டோமேட்டிக் சென்ட்ரல் லாக் ஆகி உள்ளேயே அடைபட்டுப் போய் அதிகமாக மரணிக்கின்றனர். அரிதாகப் பெரியவர்களும், குறிப்பாக அதீத போதையில் இருப்பவர்களும் மரணமடைகிறார்கள்.

இது எதனால் நிகழ்கிறது என்று பார்ப்போம்.

ஒரு சராசரி மனிதனுக்கு தினசரி 300 லிட்டர் ஆக்சிஜன் அவன் சுவாசிக்கத் தேவை. அதாவது ஒரு மணிநேரத்துக்கு 12.6 லிட்டர் ஆக்சிஜன் எனும் உயிர்வளி கட்டாயத் தேவையாகும்.

இப்போது முற்றிலும் பூட்டப்பட்ட ஜன்னல்கள் மூடப்பட்ட காருக்குள் நான்கு குழந்தைகள் மாட்டிக் கொள்கின்றனர் என்பதைக் கற்பனை செய்வோம். பூட்டிய காருக்குள் சுமார் 3000 முதல் 4000 லிட்டர் காற்று அடைபட்டிருக்கும். வெளியில் இருந்து காற்று உள்ளே வருவதற்கோ, உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்வதற்கோ இயலாது.

காற்றில் 21% ஆக்சிஜன் கலந்துள்ளது. அப்படியென்றால் காருக்குள் இருக்கும் சுமார் 3500 லிட்டர் அடைபட்ட காற்றில், 735 லிட்டர் ஆக்சிஜன் இருக்கும்.

ஒரு குழந்தை ஒரு நிமிடத்திற்கு 0.25 லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்கும் என்றால், நான்கு குழந்தைகளும் ஒரு நிமிடத்திற்கு ஒரு லிட்டர் ஆக்சிஜன் என ஒரு மணிநேரத்திற்கு அறுபது லிட்டர் வீதம், அடுத்த பனிரெண்டரை மணிநேரம் அவர்கள் நால்வரும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் உள்ளே இருக்கிறது.

பிறகு ஏன் பூட்டப்பட்ட கார்களுக்குள் சென்ற குழந்தைகள் இரண்டு மூன்று மணிநேரங்களுக்குள் மூர்ச்சையாகி மரணமடைகின்றனர்?

இதற்குக் காரணம், நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது ஆக்சிஜனை வைத்துக் கொண்டு, சுவாசத்தை வெளிவிடும் போது கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை மூச்சுக் காற்றில் வெளியேற்றுகிறோம்.

முறையாக ஜன்னல்கள் திறந்திருக்கும் காரில் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடு வெளியே சென்று, புதிய ஆக்சிஜன் உள்ள காற்று உள்ளே வந்து விடும். ஆனால் அடைக்கப்பட்ட காருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வெளியிடும் மூச்சுக் காற்றின் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கூடிக் கொண்டே செல்லும். இதுதான் உயிரைக் கொல்லும் முக்கிய ஆபத்து.

ஒரு இடத்தில் நிலவும் காற்றில், கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 1000 பிபிஎம் (PPM) என்பதற்கு கீழ் இருப்பது உகந்தது என்கிறது உலக சுகாதார நிறுவனம். சென்ஸ் ஏர் எனப்படும் காருக்குள் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு சென்சார் தயாரிக்கும் நிறுவனம் இது குறித்துப் பல ஆய்வுகள் செய்துள்ளது.

கதவுகள், ஜன்னல்கள் பூட்டப்பட்ட காருக்குள் நான்கு மனிதர்கள் ஏசி போட்டுக் கொண்டு பயணம் செய்யும் போது:

  • 1½ நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு – 1000 பிபிஎம் தொட்டு விடுகிறது.
  • 5 நிமிடங்களில் – 2500 பிபிஎம். (2000 பிபிஎம் தாண்டினாலே மயக்கம், தலை சுற்றல், தலைவலி, தூக்கம் வருவது போல் இருப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.)
  • 22 நிமிடங்களில் – 6000 பிபிஎம்.

இத்தனைக்கும் ஏசியை வெளிப்புறக் காற்று உள்ளே புகும் மோடில் வைத்துப் பயணிக்கும் போதே இத்தகைய நிலை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவே கதவுகள் பூட்டப்பட்டு ஜன்னல்கள் மூடிய எஞ்சின் ஓடாத காருக்குள் நான்கு பேர் இருக்கும் போது 15 நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 40,000 பிபிஎம் தொட்டிருக்கின்றன.

மற்றொரு ஆய்வில், இருவர் சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் காரில் ஏசி போட்டுப் பயணிக்கும் போது பிபிஎம் 1400 என்ற அளவில் உயர்ந்துள்ளது. பிறகு இந்த அளவுகள் 1000-க்கு கீழ் குறைவதற்கு அடுத்த நாள் காலை வரை, அதாவது பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டுள்ளது.

இப்போது கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கூடக் கூட மனித உடலுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்:

2000-2500 பிபிஎம் வரை:

  • சோர்வு
  • கவனச்சிதறல்
  • வேக்காடாக உணர்தல்

2500-5000 பிபிஎம்:

  • தலைவலி
  • தலை சுற்றல்
  • உறக்கம் ஏற்படும் நிலை

5000-40,000 பிபிஎம்:

  • மூச்சுத் திணறல்
  • மூர்ச்சை நிலை
  • அதீத கவனக் குறைபாடு

40,000-க்கு மேல்:

  • தீவிர மூச்சுத் திணறல்
  • கோமா
  • திடீர் மரணம் ஏற்படுதல்

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், காருக்குள் அடைபடும் போது காற்றில் இருக்கும் ஆக்சிஜன் நமக்கு பல மணிநேரங்களுக்குப் போதுமானதாக இருந்தாலும் கூட, நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் மிகவும் வேகமாக உள்ளே அதன் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே செல்லும். இதனால் நாம் தேவைக்கும் அதிகமாகக் கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கத் துவங்குவோம். அதனால் நமது உடலில் ஒரே நேரத்தில் ஆக்சிஜன் குறைபாடும் (ஹைப்பாக்சியா), கூடவே ஹைப்பர் கேப்னியா (கார்பன் டை ஆக்சைடு அதிகமாகும்) சூழ்நிலையும் தோன்றும். இதனால் உடல் அமிலத்தன்மைக்குச் செல்லும். பல உறுப்புகளும் செயலிழக்கும். மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் மூர்ச்சை நிலைக்குச் சென்று, சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதற்கடுத்தபடியாக, நிற்கும் காரில் ஏசி போட்டுக் கொண்டு, அனைத்து ஜன்னல்களையும் அடைத்துக் கொண்டு நீண்ட நேரம் உறங்குவது சரியா? தவறு.. உயிருக்கு ஆபத்தானதும் கூட..

அதாவது கார் ஓடும் போதும் கூட ஏசியை காற்று உள் சுழற்சி மட்டும் ஆகும் மோடில் வைத்திருந்தால், வெளியே இருந்து புதிய காற்று உள்ளே வராது. மகிழுந்தை வெளிப்புறத்தில் நிறுத்தி வைத்திருக்கும் போது, வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் மோடில் வைத்திருந்தால் பெரிய பிரச்சனை இல்லை.

அதுவே கார்களை நிறுத்தும் கீழறைகள் (BASEMENT) அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட அறை ஆகியவற்றில் காரை நிறுத்தி இஞ்சின் ஆன் செய்து உள்ளே உறங்குவது ஆபத்தானது. காரணம் – காருக்குள் செல்லும் காற்றானது, அந்தக் காரின் இஞ்சின் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு கலந்த காற்றாக இருக்கும். தொடர்ந்து இந்த கலப்படமான காற்று காருக்குள் வரும் போது, இயல்பாகவே சுவாசிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கூடிவிடும். இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும். அதிலும் குடி போதையில் இருக்கும் போது இதைக் கவனிக்கும் வாய்ப்பு குறைவு. இதனால் மரணம் நிகழும்.

இதைத் தவிர்க்க, காருக்குள் தூங்க வேண்டும் என்றால் பாதுகாப்பான திறந்த வெளியில் ஜன்னல்களை லேசாகத் திறந்து வைத்து விட்டு, இஞ்சினை ஆன் செய்யாமல் உறங்குவது சிறந்தது.

இன்னும் கார் சம்பந்தமான ஏசி இயக்கத்தில் பாதுகாப்புக்காகச் சில டிப்ஸ்கள் இதோ:

ஏசி மோடில் இரண்டு வகை உண்டு:

  1. நாம் சுவாசிக்கும் காற்று உள்ளேயே சுழற்சியில் இருக்கும் மோட்.
  2. வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே வரும் மோட்.

காருக்குள் இருவருக்கு மேல், நால்வர் மற்றும் அதற்கு மேல் நபர்கள் பயணிக்கும் போது, வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே புகும் ஏசி மோடில் பயணிப்பது நல்லது. இது உங்கள் காருக்குள் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் சரியாக இருப்பதை உறுதி செய்யும்.

நீண்ட நெடிய பயணங்கள் செல்லும் போது அவ்வப்போது கட்டாய ப்ரேக் எடுத்து, சில நிமிடங்கள் அனைவரும் இறங்கி வெளிக்காற்றைப் பெறுவது கட்டாயமாகிறது.

வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிக நேரம் கார் நிற்க நேருமாயின், ஏசியை ஆஃப் செய்து விட்டு ஜன்னல்களைத் திறந்து கொண்டு நிற்பது நல்லது. காரணம் – நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் வாகனங்களின் புகை அதிகமாக இருக்கும். குறிப்பாக நமக்கு முன் நிற்கும் கார்/ பேருந்தின் எக்ஸ்ஹாஸ்ட் டைலில் (Exhaust tail) இருந்து வெளிவரும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு/ கார்பன் மோனாக்சைடு அதிகம் உள்ள காற்றை நமது காருக்குள் ஏசி உள்ளிழுக்கும். இது நமக்கு ஊறு விளைவிக்கலாம். இது போன்ற சமயங்களில் காற்று உள் சுழற்சி மட்டும் ஆகுமாறு மோட் செட் செய்து கொள்ளவும்.

கட்டாயம் மூடிய காரில் ஏசி போட்டு உறங்கக் கூடாது. அதுவும் மது அருந்தி விட்டு உறங்கவே கூடாது.

பொதுவாகக் கார்களை நாம் லாக் செய்யும் போது ஜன்னல்களில் ஒன்றோ இரண்டிலோ குறைந்தபட்சம் ஒரு செண்ட்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டால், தற்செயலாக விபரீதமாகக் குழந்தைகள் உள்ளே சென்று விளையாடி கார் லாக் ஆனால் கூட, அந்த ஒரு செண்டிமீட்டர் இடைவெளியானது உயிர்களைக் காப்பாற்றக் கூடும்.

நம் குழந்தைகளை கண்காணிப்புடன் வளர்த்து வருவோம். என்றும் குழந்தைகள் காணவில்லை எனில் முதலில் சுற்றி இருக்கும் கார்களில் சென்று தேடுவதை வழக்கமாகக் கொள்வோம். காரணம் தற்காலக் குழந்தைகள் கார்களின் சாவிகளைத் தானே எடுத்துக் கொண்டு அவற்றைச் சிறிய அழுத்தலில் திறந்து உள்ளே சென்று விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அவர்களிடம் கார் சாவி கிடைக்காமல் பார்த்துக் கொள்வதையும் உறுதி செய்யலாம்.

கார் – ஏசி – கார்பன் டை ஆக்சைடு – ஆக்சிஜன் – கார்பன் மோனாக்சைடு என்று நாம் கற்றுக் கொண்ட இந்த விஷயங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றுவோம். இன்னுயிர்களைக் காப்போம்.

Author

Related posts

வரலாற்றில் பொருளாதாரம் – 35

அறிவெழுச்சி: 2

தரிசனம்