நல்லாச்சி – 27

This entry is part 27 of 32 in the series நல்லாச்சி

இருளென்றால் பயப்படும் பேத்திக்கு
இரவும் ஆகாது
மூன்றுகண்ணன் வசிப்பதாய்
முற்றத்திற்கும் செல்ல மாட்டாள்
இரவின் நிறத்தைப் பூசியதால்
கருமையும் ஒவ்வாததாயிற்று

ஒரு எள்ளுருண்டையைப்போல்
திரண்டிருக்கும் கன்றுக்குட்டிக்கோ
அவளென்றால் தனிப்பிரியம்
ஒதுக்கினாலும் விரட்டினாலும்
அகலாது பிரியஞ்சொரியும்

பேத்தியைத் தெளிவிக்க
இட்டுச்சென்ற நல்லாச்சி
பலவும் சொல்லிப் போதிக்கிறாள்
பிஞ்சு மனதைப் பக்குவப்படுத்துகிறாள்
இரவின் கருமைக்குள்தான் நட்சத்திரங்கள்
தம் முகவரியைத் தேடிக்கொள்கின்றன
வெளிச்சம் ஓர் பிம்பம் எனில்
இருள் ஓர் நிஜம்
வெயில் குடித்துக் களைத்த பூமியின்
போர்வையே இருள்
இத்தனை அஞ்சும் நீ
கண்துஞ்சும்போது
உன்னுள் அமைதியாய் உறைந்திருப்பவும்
காரிருளே
இருளை அஞ்சுவாயெனில்
அது
உன்னையே நீ அஞ்சுவதாம்
யோசிக்க ஆரம்பிக்கிறாள் பேத்தி
ஊர ஆரம்பித்திருக்கிறது எறும்பு
கல் தேய்ந்துவிடும் விரைவில்

Series Navigation<< நல்லாச்சி – 26நல்லாச்சி – 28 >>

Author

Related posts

இறைவனின் இணையில்லாப் படைப்பு

5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)

திருவை மு.இரா. கவிதைகள் -3