நல்லாச்சி – 28

This entry is part 28 of 41 in the series நல்லாச்சி

வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியை
வருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்
மழையும் குளிரும் வெயிலும்
அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லி
அந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’
ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவை
பாவம்போல்
குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்
தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள்

முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகு
சாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்
குலைகுலையாய் நுங்கும் இளநீரும்
கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்
ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்
குட்டிச் சிப்பாய் பேத்தியுடன்

அவ்வூரைக் கடக்குமட்டும்
மேகத்தில் முகம் மறைக்கும்
நல்லாச்சிக்குப்பயந்த சூரியன்
ஆச்சிக்காய் கொணர்ந்த பனிப்பாறை
உருகிச் சிதற
படபடவெனப் பெய்கிறது ஆலங்கட்டி மழை
‘நாசமத்த மழை, என் செடியெல்லாம் போச்சே’
இன்னும் திட்டுகிறாள் நல்லாச்சி
வெறுத்துப்போன சூரியன்
பால்வெளிக்கப்பால்
சன்யாசியாய்ப் போய்விட்டதாய்க் கேள்வி.

நல்லாச்சி

நல்லாச்சி – 27 நல்லாச்சி – 29

Author

Related posts

எளிதில்லை

கைவிடப்பட்ட கவிதை

வாழ்வு