உதிர்த்த இலைகளில் பாக்கியுள்ளதென
பலமாக அடித்தது காற்று
உதிர்ந்ததும் உதிராததும் நனைந்தன மழையில்
உயிரற்றும் உயிரோடும்
பலத்த காற்றுக்கும் எதிர்ப்பில்லை
பலத்த மழைக்கும் எதிர்ப்பில்லை
கடும் வறட்சிக்கும் எதிர்ப்பில்லை
எப்படித்தான் வாழ்வாயோ
நகர்ந்து செல்ல முடிந்தால்
பல்லாயிரம் இறக்கைகள் முளைத்தால்
எல்லாரோடும் உரையாட முடிந்தால்
வெளிச்சத்தில் இருளைப் பார்க்க முடிந்தால்
உனக்கு நிகர்தான் யாரு.
உண்மையென்றால் குழப்பம்தான்
இருக்கலாம் அவ்வளவுதான்
ஆனால் இல்லை
கறைபடிந்த பற்களைத் தேனில் ஊறியது என்றேன்
எச்சிலைத் தேன் என்றேன்
வாயொழுகும் அமுதம் என்றேன்
வான் பொழியும் நீரென்றேன்
அன்பை விடாது ஒழியாது
வசனம் பேசியது எல்லாம்
உண்மையென்றால் குழப்பம்தான்
இருக்கலாம் அவ்வளவுதான்
ஆனால் இல்லை
காலந்தொட்டுக் கடந்துவந்த
காதலைப் பாடாத
கவிமனமொன்று உண்டா சொல்
காதலே நீயே வா
என்னோடு உரையாடு
என் சந்தேகங்களைத் தீர்த்துவிட்டு
கேள்விகளைக் கேட்டுவிட்டு
போகாதே
என்னோடே தங்கிவிடு
உனக்கு சொல்லவேண்டுமென்று இருக்கும் அல்லவா
என்னிடம் சொல்
என்னை நீ மனதார நம்பலாம்.