நல்லாச்சி – 33

This entry is part 33 of 33 in the series நல்லாச்சி

சிக்கனமென்பது கிஞ்சித்துமில்லா
மூத்தவனால் பெருங்கவலை நல்லாச்சிக்கு
காசுபணமெல்லாம் தண்ணீர் பட்டபாடு அவனுக்கு
தண்ணீரையும் அவ்வாறே வாரியிறைப்பான்
பிறரைப்பற்றிக் கவலை கொள்ளா அப்பெருஞ்செலவாளி
நாளையைப் பற்றிச் சற்றும் எண்ணாதவனை
எண்ணியெண்ணி நாளும் உருகுகிறாள்
‘எங்காலத்துக்குப் பொறவு என்ன கதியோ?!’ என மருகுகிறாள்
பிள்ளையின்மேல் படியும் ஏளனப்பார்வைகளை
சகியாத நல்லாச்சி
பெரியப்பனுக்குப் பரிகிறாள் பேத்தி

தாகங்கொண்ட வெய்யோன் அருந்தியதால்
கோழிக்காலாய் வெடித்த குளங்கள்
மணல் சுரக்கும் ஆறுகள்
அத்தனை உயிர்களுக்கும் அடைக்கலமாகும் கிணறுகள்
எனத் தாண்டவமாடும் கோடையில்
வீட்டினுள்ளும் சொட்டுநீர் விநியோகம்
ஆழ்குழாய்க் கிணறுகளின் புண்ணியத்தில்

ஆன்றோர்நாள் நீரேற்றும் விசைப்பொறி மௌனித்துவிட
நீரின்றித்தவிக்கிறது மூத்தவன் வீடு
போட்டியாய் வறண்டுகிடக்கிறது வங்கிக்கையிருப்பு
‘நல்ல வாக்கு’ நான்கு உரைக்கிறாள் நல்லாச்சி
பிள்ளைக்கு உறைக்குமென நம்பி
ஒரே பாடலில் உயரும் திரைக்கதாநாயகனல்லன்
திடீரெனத் திருந்தும் சந்தர்ப்பவாதியுமல்லன்
எனினும்
கடமையை ஆற்றுகிறாள் நல்லாச்சி
கவலையுடன் கவனிக்கிறாள் பேத்தி.

Series Navigation<< நல்லாச்சி – 32

Author

Related posts

உருதுக்கவிதை உலகு – 2

பரமசிவன் பாதம் பணி – அந்தாதி

தேயும் நிலா