சூறாவளி வரப்போவதாய்
லேடியோப்பொட்டி அறிவித்த அன்றிருந்தே
கலக்கமுற்றிருக்கிறாள் நல்லாச்சி
அறுவடைக்குத் தயாராயிருப்பவற்றிலிருந்து
அப்போதுதான் நட்டவை வரைக்கும்
அத்தனையும் அபாயத்திலிருந்தாலும்
நாணித் தலைசாய்ந்து நிற்கும்
வாழைகள் மேல் அதிகக்கரிசனம் அவளுக்கு
விளைந்த குலைகள் கனக்க
நிறைமாத சூலிபோல் பொலிபவற்றைச்
சூறாவளி சாய்க்குமோவென அஞ்சியவள்
அஞ்சாறு பேர் துணையுடன் ஆளுயரக்கம்புகளால்
ஓடியோடி முட்டுக்கொடுக்கிறாள்
மூடிப்பொதிந்த வாழைக்குலைகளுக்கு.
பாதுகாப்பின் அவசியத்தைப் பேத்திக்கு
ஊடேஊடே பாடமும் எடுக்கிறாள்
வந்த தடம்பதித்துச் சூறாவளி சென்றபின்
‘சாத்திரத்துக்கு ஒண்ணுரெண்டை முறிச்சிருக்கு’
என ஆறி ஆசுவாசமானவள்
கண்ணீர்மல்க நகைக்கிறாள்
ரோஜாச்செடிக்கு முட்டுக்கொடுத்திருக்கும்
கைத்தடியைக் கண்டு
கைவண்ணம் யாருடையதென அவளறிவாள்
நீங்களும் நானும் மட்டும் அறியோம்.