நல்லாச்சி – 36

This entry is part 36 of 36 in the series நல்லாச்சி

சூறாவளி வரப்போவதாய்
லேடியோப்பொட்டி அறிவித்த அன்றிருந்தே
கலக்கமுற்றிருக்கிறாள் நல்லாச்சி
அறுவடைக்குத் தயாராயிருப்பவற்றிலிருந்து
அப்போதுதான் நட்டவை வரைக்கும்
அத்தனையும் அபாயத்திலிருந்தாலும்
நாணித் தலைசாய்ந்து நிற்கும்
வாழைகள் மேல் அதிகக்கரிசனம் அவளுக்கு

விளைந்த குலைகள் கனக்க
நிறைமாத சூலிபோல் பொலிபவற்றைச்
சூறாவளி சாய்க்குமோவென அஞ்சியவள்
அஞ்சாறு பேர் துணையுடன் ஆளுயரக்கம்புகளால்
ஓடியோடி முட்டுக்கொடுக்கிறாள்
மூடிப்பொதிந்த வாழைக்குலைகளுக்கு.
பாதுகாப்பின் அவசியத்தைப் பேத்திக்கு
ஊடேஊடே பாடமும் எடுக்கிறாள்

வந்த தடம்பதித்துச் சூறாவளி சென்றபின்
‘சாத்திரத்துக்கு ஒண்ணுரெண்டை முறிச்சிருக்கு’
என ஆறி ஆசுவாசமானவள்
கண்ணீர்மல்க நகைக்கிறாள்
ரோஜாச்செடிக்கு முட்டுக்கொடுத்திருக்கும்
கைத்தடியைக் கண்டு
கைவண்ணம் யாருடையதென அவளறிவாள்
நீங்களும் நானும் மட்டும் அறியோம்.

Series Navigation<< நல்லாச்சி – 35

Author

Related posts

சிறகுகள் தீண்டிய உலகம்

தான வீர சூர கர்ணன் – 2

மருத்துவர் பக்கம் – 31: வென்டிலேட்டர் சிகிச்சை