2
நாளும் நாலு நல்லதை
நடைப்பயிற்சியின்போது அலசுவது
நல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்
தகவல்கள் பரிமாறுவதுபோலவே
அறிவுரைகளும் பரிமாறப்படும்
பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி
வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்
அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்
நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரை
பிழிந்து அலசியபின்
பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்று
மனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென
அகந்தையும் தன்முனைப்பும்
பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்
காரணங்களென்கிறாள் நல்லாச்சி
துளிக்குள் பிறந்தழியும்
மாந்தர் அறியாரோ
துளிக்குள் துளியே தாமென்று
அகந்தை அமர்ந்த அறிவும்
மதயானை புகுந்த மல்லித்தோட்டமும்
பிழைக்குமோ!! தழைக்குமோ!!
சென்றுகொண்டேயிருக்கிறாள் பேத்தி
நின்று கொண்டேயிருக்கிறாள் நல்லாச்சி
யுகயுகமாய்..