பள்ளி முடிந்து
அவசர அவசரமாக
வீட்டிற்கு வந்து
அம்மா வருவதற்குள்
பேனா மைத்துளிகள்
கோலமிட்ட சீருடையை
சோப்பு நீரில்
முக்கித் துவைக்கையில்…
பறந்து உடையும்
வண்ண நீர்க்குமிழிகளில்
அன்றைக்கு சூதுவாதின்றி
நண்பர்களுடன் ஏமாற்றி
கொட்டமடித்த எண்ணங்கள்
மின்னி மறையும்;
பிள்ளைப் பருவத்தில்
ஏமாந்த கோபத்திற்கு
நீர்க்குமிழியின் ஆயுள்,
நீடித்த நட்பினில்
கடுமைகள் ஏதும்
பலநாள் தொடராது.
மனதினில் எதனையும்
நிறுத்திக் கொள்ளாதிருக்க
ஒரு முறையேனும்
மீண்டும் வாராதோ…
கள்ளமில்லா பிள்ளைப்பருவ
ஏப்ரல் 1.
Author
-
கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.